சாரிடான் உள்பட மேலும் 2 மருந்து பொருட்கள் விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி


சாரிடான் உள்பட மேலும் 2 மருந்து பொருட்கள் விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி
x
தினத்தந்தி 17 Sep 2018 8:15 AM GMT (Updated: 17 Sep 2018 8:15 AM GMT)

சாரிடான் உள்பட மேலும் 2 மருந்து பொருட்கள் விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

புதுடெல்லி,

2 அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகளை குறிப்பிட்ட விகிதத்தில் சேர்த்து தயாரிக்கப்படும் மருந்துகள் எப்.டி.சி. மருந்துகள் என அழைக்கப்படுகிறது. இந்த மருந்துகளை இந்திய மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் சோதனை செய்தது. அப்போது 344 வகையான மருந்துகள் குறிப்பிட்ட விகித சேர்க்கை இன்றியும், அலட்சியமாகவும் தயாரிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மருந்துகளால் உடல் நலத்துக்கு கேடு என்பதால் கடந்த 2015-ம் ஆண்டு அவை தடை செய்யப்பட்டன. இதை எதிர்த்து சில மருந்து நிறுவனங்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த மருந்துகளின் தயாரிப்பு குறித்து மீண்டும் ஆய்வு செய்யுமாறு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது.

அதன்படி இந்திய மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியத்தின் சிறப்பு வல்லுனர் குழு மீண்டும் இந்த மருந்துகளை ஆய்வுக்கு உட்படுத்தியது. இதில் 328 வகையான மருந்து தயாரிப்பில் மேற்படி மோசடிகள் நடைபெறுவது மீண்டும் உறுதி செய்யப்பட்டது. எனவே அந்த மருந்துகளை தடை செய்யுமாறு நிபுணர் குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.

இதைத்தொடர்ந்து அந்த மருந்துகளை தயாரித்தல், விற்பனை மற்றும் வினியோகத்துக்கு மத்திய அரசு, கடந்த சில தினங்களுக்கு முன் தடை விதித்தது. இந்த மருந்துகள் பெரும்பாலும் வலி நிவாரணிகள், நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் கிருமி நாசினிகள் ஆகும். இதில் பிரபல தலைவலி மாத்திரையான சாரிடானும் இடம் பெற்று இருந்தது. 

சாரிடான் விற்பனைக்கு அனுமதி

இந்த நிலையில், மத்திய அரசின் தடைக்கு எதிராக மருந்து நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், முதற்கட்டமாக சாரிடான், டார்ட் வலி நிவாராணி, பிரிட்டான் ஆகிய மூன்று மருந்துகளுக்கும் விதிக்கப்பட்ட தடையை நீக்கி விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது. 

Next Story