தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழுவினர் ஸ்டெர்லைட்டில் ஆய்வு நடத்தக்கூடாது


தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழுவினர் ஸ்டெர்லைட்டில் ஆய்வு நடத்தக்கூடாது
x
தினத்தந்தி 19 Sep 2018 12:15 AM GMT (Updated: 18 Sep 2018 9:17 PM GMT)

தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழுவினர் ஸ்டெர்லைட்டில் ஆய்வு நடத்தக்கூடாது என்று தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.

கோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் 22-ந் தேதி முதல் பார்வையிடும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்து இருக்கிறது.

புதுடெல்லி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மே மாதம் நடந்த போராட்டத்தின்போது தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

இதைத்தொடர்ந்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

இதற்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தது. இதை விசாரித்த தீர்ப்பாயம் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது. மேலும் ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை கடந்த 30-ந் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்து உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ‘தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த ஆய்வுக் குழுவுக்கு தடை விதிக்க முடியாது’ என்று கடந்த 10-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இதன் மீதான விசாரணை விரைவில் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த ஆய்வுக்குழு 22-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய இருப்பதாக தமிழக அரசுக்கு தகவல் வந்தது.

இவ்விவகாரம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் குழுவின் வருகைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து பெங்களூருவில் உள்ள மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மண்டல இயக்குனருக்கு தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நீங்கள் எழுதிய கடிதம் கடந்த 17-ந் தேதி எங்களுக்கு கிடைத்தது. அதில், 22-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை சென்னை மற்றும் தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தை (ஸ்டெர்லைட்) பார்வையிடுவதற்கு கமிட்டி வருவதாக பயண திட்டத்தை குறிப்பிட்டு இருந்தீர்கள்.

இதுதொடர்பான தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் தன்மை குறித்து சுப்ரீம் கோர்ட்டிலும், டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்விலும் தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், இந்த விவகாரத்தில் 10.9.18 அன்று சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மறுசீராய்வு செய்யவேண்டும் என்று அந்த கோர்ட்டில் 14-ந் தேதியன்று தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

அதோடு, வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்துள்ள அப்பீல் வழக்கை எதிர்த்தும், தமிழக அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அதிகார எல்லை குறித்தும் தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் இந்த விவகாரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சூழ் நிலையில், கமிட்டி பார்வையிடும் நிகழ்வை தள்ளி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

எனவே, கமிட்டியின் திட்டமிடப்பட்டுள்ள பயணத்தை ரத்து செய்ய வேண்டும். அதோடு கமிட்டியின் தலைவருக்கும், உறுப்பினர்களுக்கும் இந்த தகவலை தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த புதிய மனு ஒன்று தீர்ப்பாயத்தின் தலைமை நடுவர் நீதிபதி ஏ.கே.கோயல், நீதிபதிகள் எஸ்.பி.வங்டி, டாக்டர் நகின் நந்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், அரசு வக்கீல்கள் யோகேஷ் கன்னா, ராகேஷ் சர்மா, பா.வினோத் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில் வக்கீல் ரோகிணி மூசா ஆஜராகி, ‘ஏற்கனவே தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளபடி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக வளாகத்தில் நிர்வாக பணிகள், பராமரிப்பு பணிகளுக்கான அனுமதி மற்றும் தாமிர மூலப்பொருட்களை அகற்றுவதற் கான அனுமதி ஆகியவற்றை மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்து வருகிறது. இதனால் எங்கள் நிர்வாகத்துக்கு நாளுக்கு நாள் பெருமளவில் பொருளாதார இழப்பீடு ஏற்படுகிறது. பணிகள் பெருமளவில் தடைபட்டுள்ளன. எனவே மேற்கண்ட பணிகளுக்கான அனுமதியை உடனடியாக வழங்குவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று வாதிட்டார்.

இதற்கு தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக் கப்பட்டது. ஏற்கனவே இந்த வழக்கின் முகாந்திரம் குறித்த சீராய்வு மனு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் நாளுக்கு ஒன்றாக புதிது புதிதாக கோரிக்கைகள் முன்வைப்பதை அனுமதிக்கக் கூடாது என்று வாதிடப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், தங்கள் கோரிக்கைகளை தீர்ப்பாயம் நியமனம் செய்துள்ள நீதிபதி தருண் அகர்வால் குழுவின் முன்பு எழுத்து வடிவில் தாக்கல் செய்ய அனுமதிப்பதாக உத்தரவு பிறப்பித்தனர்.

இதற்கு தமிழக அரசு வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் தங்கள் தரப்பிலும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் கோரிக்கைக்கு எதிராக எதிர்ப்பை தெரிவித்து சிறப்பு குழுவில் மனு தாக்கல் செய்யலாம் என்று எழுத்து வடிவில் உத்தரவு தருமாறு நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கு தீர்ப்பாய நீதிபதி ஏ.கே.கோயல் இந்த வேண்டுகோளை ஏற்க முடியாது என்றும், ஏற்கனவே தீர்ப்பாயம் ஆகஸ்டு 20-ந் தேதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் யார் வேண்டுமானாலும் குழுவின் முன்பு மனுவை தாக்கல் செய்யலாம் என்றும், அதற்காக தமிழக அரசுக்கு தனியாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் கூறினார்.

இதற்கு மூத்த வக்கீல் சி.எஸ். வைத்தியநாதன் மிகவும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். தீர்ப்பாயம் இப்படி நடந்து கொள்வது எந்த வகையிலும் சரியல்ல என்றும் தன்னுடைய எதிர்ப்பை உத்தரவில் பதிவு செய்யுமாறும் கூறினார். மேலும், தான் இதுவரை பார்த்ததில் எந்த தீர்ப்பாயமும் இப்படி நடந்து கொண்டது இல்லை என்றும் அவர் மிகக் கடுமையான குரலில் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்தார்.

இதற்கு நீதிபதி ஏ.கே. கோயல், உங்கள் வாதங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், தன்னால் அப்படி எதுவும் எழுத்து வடிவில் உத்தரவு பிறப்பிக்க இயலாது எனவும் கூறி விசாரணையை முடித்து வைப்பதாக கூறினார்.

Next Story