ராணுவ வீரர்கள் 3 பேர் சுட்டுக்கொலை: பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு இந்தியா சம்மன்

ராணுவ வீரர்கள் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது.
ஜம்மு,
காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்துக்கு உட்பட்ட சுந்தர்பனி எல்லைப்பகுதி வழியாக கடந்த 21–ந் தேதி பாகிஸ்தானை சேர்ந்த 2 பேர் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றனர். அப்போது அவர்களுக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை மூண்டது.
இதில் ஊடுருவல்காரர்கள் 2 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதே சமயம் இந்த மோதலில் இந்திய வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்தனர். பாகிஸ்தானின் இந்த அத்துமீறல் சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டம் தெரிவித்தது.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் தூதரகத்தின் மூத்த அதிகாரிக்கு இந்தியா சம்மன் அனுப்பியது. அதோடு இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பலமான எதிர்ப்பையும் பதிவு செய்தது.
இது குறித்து வெளியுறவுத்துறை விவகார அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், ‘‘பயங்கரவாத அமைப்புகளுக்கு உடந்தையாக இருந்து கொண்டு, அமைதியை விரும்புவதாக பொய் கூறி இந்தியாவை ஏமாற்றி வரும் பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தங்கள் மண்ணில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் மீது தீர்க்கமான நடவடிக்கை எடுக்கவும் பாகிஸ்தானை இந்திய ராணுவம் எச்சரித்து இருக்கிறது’’ என கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story