சட்டசபை தேர்தல் : சத்தீஷ்கார், மத்திய பிரதேசத்தில் மோடி தீவிர பிரசாரம்


சட்டசபை தேர்தல் : சத்தீஷ்கார், மத்திய பிரதேசத்தில் மோடி தீவிர பிரசாரம்
x
தினத்தந்தி 19 Nov 2018 12:00 AM GMT (Updated: 18 Nov 2018 8:46 PM GMT)

சத்தீஷ்கார் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி பேசினார்.

ராய்ப்பூர்,

ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த மாநிலங்களில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

சத்தீஷ்காரில் 2–ம் கட்ட தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் நிலையில், இதற்கான பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. அங்குள்ள மகாசமுந்த் என்ற இடத்தில் நடந்த இறுதிக்கட்ட பிரசாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.

அப்போது காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கிய அவர், காங்கிரஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அடுக்கினார். அவர் கூறியதாவது:–

4 தலைமுறைகளாக ஒரு குடும்பம் (நேரு குடும்பம்) இந்த நாட்டை ஆண்டிருக்கிறது. இந்த ஆட்சியில் அவர்களின் குடும்பம் மட்டுமே பலனடைந்திருக்கிறதே தவிர நாட்டுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. அப்படிப்பட்டவர்கள் தற்போது மக்களின் தேவைகளை நிறைவேற்றுவார்கள் என எப்படி நாம் நம்ப முடியும்?

காங்கிரஸ் தலைவராக இருந்த சீதாராம் கேசரியை நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும். தலித் பிரிவை சேர்ந்த அவரை 5 ஆண்டுகள் காங்கிரஸ் தலைவராக நீடிக்க அனுமதிக்கவில்லை. சோனியா காந்தியை தலைவராக்குவதற்காக சீதாராம் கேசரியை காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கி விட்டனர்.

டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்ததால், கடந்த 2003 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் சத்தீஷ்காரில் முதல்–மந்திரி ராமன் சிங்கால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. பின்னர் மத்தியில் எங்கள் அரசு ஆட்சிக்கு வந்தபிறகுதான் ஒரு கூட்டுறவு ஆட்சியை உருவாக்க முடிந்தது. இந்த பிரச்சினையை குஜராத் முதல்–மந்திரியாக இருந்தபோது நானும் சந்தித்து இருக்கிறேன்.

சத்தீஷ்காரில் வாக்காளர்களுக்கு காங்கிரஸ் கட்சி பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை அளித்து இருக்கிறது. கர்நாடக தேர்தலின் போதும், அங்கு விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என அந்த கட்சி வாக்குறுதி அளித்து இருந்தது. ஆனால் தற்போது மதசார்பற்ற ஜனதாதளத்துடன் அங்கு கூட்டணி ஆட்சி அமைத்து இருந்த போதும், விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. மாறாக கடனை திருப்பி செலுத்தாத விவசாயிகள் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

ஆனால் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, விவசாயிகளின் நலனுக்காக இரவு–பகல் பராமல் உழைத்து வருகிறது. எனவே தங்கள் முன்னோரை ஏழ்மை நிலையில் வைத்திருந்த கட்சி எது? என்பதை மனதில் கொண்டு இளைஞர்கள் உள்பட அனைவரும் பா.ஜனதாவுக்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

இதைப்போல மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்திலும் பிரதமர் மோடி உரையாற்றினார். அங்கு அவர் காங்கிரஸ் கட்சியின் பசு பாதுகாப்பு கொள்கையை குறைகூறினார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘மத்திய பிரதேசத்தில் பசு பாதுகாப்பு குறித்து காங்கிரஸ் கட்சி பேசுகிறது. ஆனால் கேரளாவை சேர்ந்த அந்த கட்சி தொண்டர்கள் பசு இறைச்சியுடன் புகைப்படம் எடுத்து, அதை தங்கள் பிறப்புரிமை என வெளியிட்டு வருகின்றனர்’ என்று குற்றம் சாட்டினார்.

மேலும், மத்திய பிரதேசத்தின் 15 ஆண்டுகால பா.ஜனதா ஆட்சியுடன் 55 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை ஒப்பிட முடியுமா? என காங்கிரஸ் தலைவர்களுக்கு அவர் சவாலும் விடுத்தார்.


Next Story