சோனியா காந்தியுடன் மத்திய மந்திரி சந்திப்பு - நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த ஆலோசனை


சோனியா காந்தியுடன் மத்திய மந்திரி சந்திப்பு - நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த ஆலோசனை
x
தினத்தந்தி 7 Jun 2019 11:15 PM GMT (Updated: 7 Jun 2019 9:59 PM GMT)

சோனியா காந்தியை மத்திய மந்திரி சந்தித்து பேசினார். நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீண்டும் பதவி ஏற்றுள்ளது. இதையடுத்து, புதிய 17-வது மக்களவை அடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடர், வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது.

முதல் இரண்டு நாட்கள் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறும். 19-ந்தேதி, சபாநாயகர் தேர்தல் நடத்தப்படும்.

20-ந்தேதி, இரு அவைகளும் அடங்கிய கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். ஜூலை 5-ந்தேதி, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

ஜூலை 26-ந்தேதிவரை கூட்டத்தொடர் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முத்தலாக் தடை உள்பட 10 அவசர சட்டங்களை மசோதாக்களாக நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே, இந்த முதல் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த மத்திய அரசு விரும்புகிறது. அதனால் முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்களை சந்திக்கும் பணியை தொடங்கி உள்ளது.

நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரஹலாத் ஜோஷி நேற்று சந்தித்தார். அப்போது, நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த காங்கிரசின் ஒத்துழைப்பை கோரினார். இச்சந்திப்பு 15 நிமிட நேரம் நீடித்தது.

மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், நாடாளுமன்ற தி.மு.க. தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோரையும் பிரஹலாத் ஜோஷி சந்தித்து பேசினார்.


Next Story