திருப்பதியில் காஞ்சீபுரம் பக்தர்களை தாக்கிய போலீசார் பணியிட மாற்றம் - தேவஸ்தான அதிகாரி நடவடிக்கை


திருப்பதியில் காஞ்சீபுரம் பக்தர்களை தாக்கிய போலீசார் பணியிட மாற்றம் - தேவஸ்தான அதிகாரி நடவடிக்கை
x
தினத்தந்தி 16 Jun 2019 10:10 PM GMT (Updated: 16 Jun 2019 10:10 PM GMT)

திருப்பதியில் காஞ்சீபுரம் பக்தர்களை தாக்கிய போலீசாரை பணியிட மாற்றம் செய்து தேவஸ்தான அதிகாரி நடவடிக்கை எடுத்தார்.

திருமலை,

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த டில்லிபாபு, தனது நண்பர்களுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார். அவர்களை அலிபிரி சோதனைச்சாவடியில் சிறப்பு பாதுகாப்புப்படை போலீசார் சோதனையிட்டனர். அப்போது டில்லிபாபுவின் சட்டை பாக்கெட்டில் புகையிலை பொருட்கள் இருந்ததாக தெரிகிறது.

இதனால் போலீசாருக்கும், டில்லிபாபு உள்ளிட்டோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த போலீசார் டில்லிபாபுவை கண்மூடித்தனமாக தாக்கினர். மேலும் அவருடன் சென்ற மற்ற பக்தர்களுக்கும் அடி விழுந்தது. இதில் அவர்கள் காயமடைந்தனர். அப்போது அந்த சோதனைச்சாவடியில் வேலை பார்க்கும் தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படையினர், இந்த சம்பவம் குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்காலுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் விசாரணை நடத்திய அனில்குமார் சிங்கால், அலிபிரி சோதனைச்சாவடியில் பணியில் இருந்த சிறப்பு போலீசார் 4 பேர் மற்றும் தனியார் நிறுவன காவலாளிகள் 2 பேர் என 6 பேரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.


Next Story