வெளிநாட்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை: விமான நிலைய சுங்க அதிகாரிகள் 2 பேர் பணி இடைநீக்கம்


வெளிநாட்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை: விமான நிலைய சுங்க அதிகாரிகள் 2 பேர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 16 Jun 2019 10:24 PM GMT (Updated: 16 Jun 2019 10:24 PM GMT)

வெளிநாட்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விமான நிலைய சுங்க அதிகாரிகள் 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

புதுடெல்லி,

உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒரு பெண் டெல்லியில் சிகிச்சை பெற்று வரும் தன்னுடைய சகோதரி மகளை பார்க்க டெல்லி விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது போதைப்பொருள் வைத்திருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறி அந்த பெண்ணை தனி அறைக்கு கண்காணிப்பாளர் அந்தஸ்தில் உள்ள விமான நிலைய சுங்கத்துறை உயர் அதிகாரி, பெண் ஊழியர்கள் துணை இன்றி அழைத்து சென்றார். கண்காணிப்பு கேமரா இல்லாத அந்த அறையில் சுமார் ½ மணி நேரம் அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுபற்றி அந்த பெண் விமான நிலையத்தில் உள்ள மற்றொரு சுங்கத்துறை அதிகாரியிடம் புகார் கொடுத்தார். ஆனால் அவர் அந்த புகாரை ஏற்க மறுத்ததுடன், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் போலி வழக்கு பதிவு செய்வோம் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

கடந்த மாதம் 3-ந் தேதி நடந்த இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்தது. இது குறித்து சுங்கத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது இரு அதிகாரிகளும் தவறு செய்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் பணி இடைநீக்கம் செய்து உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

Next Story