காங்கிரசில் உள்கட்சி சண்டைக்கு ராகுல் காந்தி முடிவு கட்ட வேண்டும் - வீரப்ப மொய்லி பேட்டி


காங்கிரசில் உள்கட்சி சண்டைக்கு ராகுல் காந்தி முடிவு கட்ட வேண்டும் - வீரப்ப மொய்லி பேட்டி
x
தினத்தந்தி 16 Jun 2019 11:02 PM GMT (Updated: 16 Jun 2019 11:02 PM GMT)

காங்கிரசில் நிலவும் உள்கட்சி சண்டைக்கு ராகுல் காந்தி முடிவு கட்ட வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி வீரப்ப மொய்லி கூறினார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் மத்திய மந்திரி வீரப்ப மொய்லி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்விக்கு தார்மீக பொறுப்பு ஏற்று தலைவர் பதவியை ராஜினாமா செய்ய ராகுல் காந்தி முன்வந்தார். ஆனால் அவரது ராஜினாமாவை ஏற்க மறுத்த காரிய கமிட்டி, அவரே தொடர்ந்து தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. ராகுல் காந்தியால் மட்டுமே கட்சியை வழிநடத்திச் செல்ல முடியும்.

காங்கிரஸ் மோசமாக தோல்வி அடைந்த மாநிலங்களில் அதற்கான பொறுப்பை சம்பந்தப்பட்ட அந்த மாநிலங்களின் தலைவர்களும், அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர்களும்தான் ஏற்கவேண்டுமே தவிர கட்சியின் தலைவரான ராகுல் காந்தி அல்ல.

காங்கிரசில் உள்கட்சி தேர்தலை நடத்தி கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டியது மிகவும் முக்கியமானது ஆகும். காங்கிரசில் நிலவும் உள்கட்சி சண்டைக்கு ராகுல் காந்தி முடிவு கட்ட வேண்டும். இந்த விஷயத்தில் கருணை காட்டாமல் உறுதியான நடவடிக்கை எடுத்து கோஷ்டி பூசலை களைய வேண்டும். அப்போதுதான் ராகுல் காந்தி உறுதியான, வலிமையான தலைவர் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படும்.

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் குறைவான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள போதிலும், மக்களவையில் வலுவான, ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன்.

பிரியங்கா காந்தி சில மாதங்களுக்கு முன்புதான் அரசியலில் நுழைந்தார். உத்தரபிரதேசத்தில் கட்சியை வலுப்படுத்த அவருக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. அங்கு வருகிற 2022-ம் ஆண்டில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலுக்குள் கட்சியை பலப்படுத்துவதில் அவர் மிகவும் உறுதியாக இருக்கிறார்.

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெறும் பட்சத்தில், தேசிய அளவிலும் காங்கிரஸ் வெற்றி பெறும். இவ்வாறு வீரப்ப மொய்லி கூறினார்.


Next Story