மேற்கு வங்காளத்தில் டாக்டர்கள் போராட்டம் வாபஸ் - மம்தாவுடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து அறிவிப்பு


மேற்கு வங்காளத்தில் டாக்டர்கள் போராட்டம் வாபஸ் - மம்தாவுடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து அறிவிப்பு
x
தினத்தந்தி 18 Jun 2019 12:00 AM GMT (Updated: 17 Jun 2019 10:24 PM GMT)

டாக்டர்கள் வேலை நிறுத்தத்தால், நேற்று நாடு முழுவதும் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டது. மம்தா பானர்ஜியுடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து, மேற்கு வங்காளத்தில் ஒரு வார கால போராட்டத்தை வாபஸ் பெற டாக்டர்கள் சம்மதித்தனர்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ். அரசு ஆஸ்பத்திரியில் கடந்த வாரம் ஒரு நோயாளி மரணம் அடைந்தார். உடனே ஆத்திரம் அடைந்த அவருடைய உறவினர்கள் 200-க்கும் மேற்பட்டோர், அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டரை அடித்து உதைத்தனர். இதில் டாக்டரின் மண்டை உடைந்தது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்தை கண்டித்தும், அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் மேற்கு வங்காளத்தில் டாக்டர்கள் ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வந்தனர். பணிக்கு திரும்புமாறு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்தார். அதை டாக்டர்கள் ஏற்கவில்லை.

இதற்கிடையே, போராட்டம் நடத்தி வரும் டாக்டர்களுக்கு ஆதரவாக நேற்று (திங்கட்கிழமை) நாடுதழுவிய 24 மணி நேர வேலை நிறுத்தத்துக்கு இந்திய மருத்துவ சங்கம் அழைப்பு விடுத்தது. அதன்படி, நேற்று காலை 6 மணிக்கு நாடு முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் வேலை நிறுத்தம் தொடங்கியது.

அத்தியாவசியம் அல்லாத மருத்துவ சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனால், புறநோயாளிகள் பிரிவில் டாக்டர்கள் யாரும் நோயாளிகளை கவனிக்க வரவில்லை. இதனால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆஸ்பத்திரி வளாகத்தில் குவிந்து கிடந்தனர். வசதியான நோயாளிகள், தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு படையெடுத்தனர். அரசு ஆஸ்பத்திரிகளில் அவசர சிகிச்சை பிரிவு மட்டும் இயங்கியது.

டெல்லி ‘எய்ம்ஸ்’ உள்ளுறை டாக்டர்கள் எதிர்ப்பு பேரணி நடத்தினர். நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான டாக்டர் கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் அரசு பொது மருத்துவமனை டாக்டர்கள் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவாக ‘கருப்பு பேட்ஜ்’ அணிந்து பணிக்கு வந்தனர். அதுபோல், மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பணியாற்றும் அரசு டாக்டர்களும் ‘கருப்பு பேட்ஜ்’ அணிந்து வந்தனர்.

சில தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்களும், இந்த வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு அளித்தனர். அவர்கள் ‘கருப்பு பேட்ஜ்’ அணிந்து பணிக்கு வந்திருந்தனர்.

இந்த வேலை நிறுத்தத்தால் நோயாளிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, மத்திய அரசு டாக்டர்களின் விடுமுறையை மத்திய அரசு ரத்து செய்தது. உடனடியாக பணிக்கு திரும்புமாறு உத்தரவிட்டது.

இதற்கிடையே, மேற்கு வங்காளத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர் களை மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். நேற்று பிற்பகல் 3 மணியளவில், தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், மூடிய அறைக்குள் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது, பத்திரிகையாளர்களையும் அனுமதித்து, இந்த பேச்சுவார்த்தையை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் நிபந்தனை விதித்தனர். பேச்சுவார்த்தை விவரங்களை தெரிந்து கொள்ள மக்களுக்கு உரிமை உண்டு என்று அவர்கள் கூறினர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று, பேச்சுவார்த்தையை நேரடியாக ஒளிபரப்ப முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஒப்புக்கொண்டார். இத்தகவலை சுகாதாரத்துறை செயலாளர் பிரதீப் மித்ரா, டாக்டர்களிடம் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, டாக்டர்களின் பிரதிநிதிகள், மாநில அரசு அனுப்பி வைத்த பஸ்சில் ஏறி பேச்சுவார்த்தைக்காக தலைமைச் செயலகத்துக்கு சென்றனர். 14 மருத்துவ கல்லூரிகளின் பிரதிநிதிகள் 28 பேர், என்.ஆர்.எஸ். அரசு ஆஸ்பத்திரி முதல்வர் சாய்பால் முகர்ஜி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த சென்றனர்.

தலைமைச் செயலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில், மாநில அரசு தரப்பில் மம்தா பானர்ஜியுடன், சுகாதாரத்துறை மந்திரி சந்திரிமா பட்டாச்சார்யா, சுகாதார செயலாளர் பிரதீப் மிஸ்ரா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தை படம் பிடிக்க 2 வங்க மொழி சேனல்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன.

பேச்சுவார்த்தையின்போது, அரசு ஆஸ்பத்திரிகளில் தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகளை டாக்டர்கள் குழு எடுத்துரைத்தது. என்.ஆர்.எஸ். ஆஸ்பத்திரியில் டாக்டரை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

அதற்கு மம்தா பானர்ஜி, அச்சம்பவத்தில் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், போராட்டத்தில் ஈடுபட்ட எந்த டாக்டர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறினார்.

மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் டாக்டர்களின் பாதுகாப்புக்காக ஒரு போலீஸ் அதிகாரியை நியமிக்குமாறு போலீஸ் கமிஷனருக்கு மம்தா பானர்ஜி உத்தரவிட்டார். அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் டாக்டர்கள் குறைதீர்ப்பு மையங்கள் அமைக்கவும் அவர் உத்தரவிட்டார்.

மம்தாவின் வாக்குறுதிகளை ஏற்று, மேற்கு வங்காளத்தில் ஒரு வார காலமாக நடத்தி வரும் போராட்டத்தை வாபஸ் பெற சம்மதிப்பதாக டாக்டர்கள் குழு உறுதி அளித்தது.

இந்நிலையில், நாடு முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் அலக் அலோக் ஸ்ரீவஸ்தவா என்ற வக்கீல், பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், அரசால் நியமிக்கப்பட்ட பாதுகாப்பு படையினரை ஒவ்வொரு அரசு ஆஸ்பத்திரியிலும் நிறுத்த மத்திய உள்துறை அமைச்சகம், சுகாதார அமைச்சகம் ஆகியவற்றுக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரி இருந்தார்.

இந்த மனுவை இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரிப்பதாக நீதிபதி தீபக் குப்தா தலைமையிலான அமர்வு கூறியது.


Next Story