காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் காயமடைந்த 2 வீரர்கள் உயிரிழப்பு


காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் காயமடைந்த 2 வீரர்கள் உயிரிழப்பு
x
தினத்தந்தி 18 Jun 2019 10:45 PM GMT (Updated: 18 Jun 2019 10:34 PM GMT)

காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் காயமடைந்த 2 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் இந்த தாக்குதலுக்கு காரணமான முக்கிய சதிகாரன், துப்பாக்கி சண்டையில் பலியானான்.

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில், 44 போலீசார் பலியானார்கள்.

இதேபோன்ற தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் மீண்டும் சதித்திட்டம் தீட்டி இருப்பதாக பாகிஸ்தான் அரசு இந்தியாவிடம் தெரிவித்தது. அதுபோலவே, நேற்று முன்தினம் புல்வாமா மாவட்டம் அரிஹால் என்ற இடம் அருகே, ராணுவ ரோந்து வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தினர். அத்துடன், துப்பாக்கி சண்டையும் நடந்தது. இந்த தாக்குதலில் 9 வீரர்கள் காயம் அடைந்து, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல், 2 வீரர்கள் நேற்று உயிரிழந்தனர். இத்தகவலை ராணுவ அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று அனந்தநாக் மாவட்டம் பிஜ்பெகரா என்ற இடத்தில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளும் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களில் ஒருவன் பெயர் சஜ்ஜத் தர். இவன், கடந்த பிப்ரவரி மாதம் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் ஆவான்.

Next Story