டெல்லியில் ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் முதல்-மந்திரிகள் சந்திப்பு: ராஜினாமா முடிவை வாபஸ் பெற வற்புறுத்தல்


டெல்லியில் ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் முதல்-மந்திரிகள் சந்திப்பு: ராஜினாமா முடிவை வாபஸ் பெற வற்புறுத்தல்
x
தினத்தந்தி 1 July 2019 11:15 PM GMT (Updated: 1 July 2019 9:10 PM GMT)

காங்கிரஸ் முதல்-மந்திரிகள் நேற்று டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து, ராஜினாமா முடிவை வாபஸ் பெறுமாறு வற்புறுத்தினார்கள்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 52 இடங்களை மட்டுமே கைப்பற்றி பெரும் தோல்வியை சந்தித்தது அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உத்தரபிரதேச மாநிலம் அமேதி, கேரள மாநிலம் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட அவர் அமேதி தொகுதியில் தோல்வி அடைந்தார்.

தேர்தலின் போது பாரதீய ஜனதா தரப்பில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸ் தலைவர்கள் சரிவர பதில் அளிக்க தவறிவிட்டதாக குறை கூறிய ராகுல் காந்தி, தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று கட்சி தலைவர் பதவியை தான் ராஜினாமா செய்வதாக சமீபத்தில் அறிவித்தார். புதிய தலைவரை மூத்த தலைவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ராகுல் காந்தியின் இந்த முடிவு காங்கிரஸ் தலைவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. ராஜினாமா முடிவை வாபஸ் பெறுமாறு ராகுல் காந்தியை அவர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால் ராகுல் காந்தி தனது முடிவில் உறுதியாக இருந்து வருகிறார்.

தேர்தல் தோல்விக்கு ராகுல் காந்தி மட்டுமே பொறுப்பு அல்ல என்றும், கட்சியில் உள்ள அனைவருக்கும் கூட்டுப்பொறுப்பு உள்ளதாகவும் கூறி, காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்து உள்ளனர்.

பதவி விலகும் முடிவை ராகுல் காந்தி வாபஸ் பெற வற்புறுத்தி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தின் முன்பு அக்கட்சி தொண்டர்கள் சிலர் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் முதல்-மந்திரிகள் அசோக் கெலாட் (ராஜஸ்தான்), கமல்நாத் (மத்திய பிரதேசம்), அமரிந்தர் சிங் (பஞ்சாப்), பூபேஷ் பாகல் (சத்தீஷ்கார்), நாராயணசாமி (புதுச்சேரி) ஆகியோர் நேற்று ராகுல் காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்கள், பதவி விலகும் முடிவை கைவிட்டு, தலைமை பொறுப்பில் இருந்து கட்சியை தொடர்ந்து வழிநடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இந்த சந்திப்பு முடிந்த பின் அசோக் கெலாட் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ராகுல் காந்தியை சந்தித்து 2 மணி நேரம் பேசினோம். இந்த சந்திப்பு நல்ல முறையில் அமைந்தது. நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளை அவரிடம் எடுத்துக்கூறி, தொடர்ந்து தலைமை தாங்கி கட்சியை வழிநடத்திச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்வி குறித்தும் ராகுல் காந்தியுடன் ஆலோசித்தோம். அப்போது கட்சியின் தோல்விக்கு தார்மீக பொறுப்பு ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தோம்.

எங்களுடைய கோரிக்கை குறித்து சாதகமான முடிவு எடுத்து கட்சியை ராகுல் காந்தி தொடர்ந்து வழிநடத்திச் செல்வார் என்று நம்புகிறோம்.

ராணுவத்தின் பெயரை பயன்படுத்தி தேர்தலில் மோடி வெற்றி பெற்று விட்டார். நாட்டுப்பற்று மற்றும் மதத்தின் பெயரால் பாரதீய ஜனதா நாட்டை தவறாக வழிநடத்துகிறது. இவ்வாறு அசோக் கெலாட் கூறினார்.

அசோக் கெலாட் தனது டுவிட்டர் பதிவில், தற்போதைய சூழ்நிலையில் ராகுல் காந்தியால் மட்டுமே கட்சியை வழிநடத்திச் செல்ல முடியும் என்று தாங்கள் உறுதியாக நம்புவதாக குறிப்பிட்டு உள்ளார்.


Next Story