கூட்டணி ஆட்சியை காப்பாற்ற காங்கிரசுக்கு முதல்-மந்திரி பதவி: குமாரசாமி திடீர் முடிவு


கூட்டணி ஆட்சியை காப்பாற்ற காங்கிரசுக்கு முதல்-மந்திரி பதவி: குமாரசாமி திடீர் முடிவு
x
தினத்தந்தி 21 July 2019 11:00 PM GMT (Updated: 21 July 2019 10:42 PM GMT)

கூட்டணி ஆட்சியை காப்பாற்ற காங்கிரசுக்கு முதல்-மந்திரி பதவி அளிக்க குமாரசாமி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் இன்று (திங்கட்கிழமை) நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. இதையொட்டி பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சித்தராமையா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் நம்பிக்கை வாக்கெடுப்பு மற்றும் விவாதத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்களுக்கு சித்தராமையா அறிவுரை கூறினார்.

முன்னதாக சித்தராமையாவை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த மந்திரிகள் ஜி.டி.தேவேகவுடா, சா.ரா.மகேஷ் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர். அவர்கள், ஆட்சியை காப்பாற்றுவது, அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தி அழைத்து வருவது குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தினர்.

அப்போது பேசிய மந்திரிகள், காங்கிரசுக்கு முதல்-மந்திரி பதவி வழங்க குமாரசாமி சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும், நீங்கள் (சித்தராமையா) முதல்-மந்திரியானால் ஜனதா தளம் (எஸ்) ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாகவும் கூறினர். இதற்கு பதில் அளித்த சித்தராமையா, முதலில் ஆட்சியை காப்பாற்ற முயற்சி செய்யலாம், அதன் பிறகு மற்ற விஷயங்களை பேசிக்கொள்ளலாம் என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்கினாலும், இதை அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஏற்கும் மனநிலையில் இல்லை என்றே சொல்லப்படுகிறது.


Next Story