கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கால் பல கிராமங்கள் துண்டிப்பு


கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கால் பல கிராமங்கள் துண்டிப்பு
x
தினத்தந்தி 8 Sep 2019 8:20 PM GMT (Updated: 8 Sep 2019 8:20 PM GMT)

கோதாவரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது.

அமராவதி,

ஆந்திராவில் கனமழையாலும், அணைகள் திறக்கப்பட்டு இருப்பதாலும் அங்குள்ள முக்கியமான ஆறுகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. தவலேஸ்வரம் அணையில் இருந்து 11 லட்சம் கன அடிக்கு மேல் நீர் திறக்கப்பட்டு உள்ளதால் கோதாவரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களை சேர்ந்த பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குறிப்பாக கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் தேவிபட்டணம் மண்டலம், கொனசீமா பிராந்தியம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன. இந்த கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளதாலும், தகவல் தொடர்பு சாதனங்கள் துண்டிக்கப்பட்டு இருப்பதாலும் அங்கு வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

இதைப்போல ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்தில் இருந்து 2.26 லட்சம் கனஅடிக்கு மேல் கிருஷ்ணா நதியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் அந்த நதிக்கரையோரத்தில் வசிக்கும் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story