கா‌‌ஷ்மீரில் செல்போன், இணைய சேவை தொடர்ந்து முடக்கம் - மாணவர்கள் இன்றி பள்ளிகள் மூடல்


கா‌‌ஷ்மீரில் செல்போன், இணைய சேவை தொடர்ந்து முடக்கம் - மாணவர்கள் இன்றி பள்ளிகள் மூடல்
x
தினத்தந்தி 11 Sep 2019 8:30 PM GMT (Updated: 11 Sep 2019 7:04 PM GMT)

கா‌‌ஷ்மீரில் செல்போன், இணைய சேவை தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் இன்றி பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

ஸ்ரீநகர்,

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் கா‌‌ஷ்மீர் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள், ஜம்மு பிராந்தியத்தில் ஏற்கனவே நீக்கப்பட்ட போதும் கா‌‌ஷ்மீர் மண்டலத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. இதனால் 38-வது நாளாக நேற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.அங்கு தொலைபேசி இணைப்புகள் மீண்டும் இயக்கத்துக்கு வந்துள்ள நிலையில், செல்போன் மற்றும் இணையதள சேவைகள் தொடர்ந்து முடக்கப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்கள், பத்திரிகையாளர்கள், அலுவலக ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மக்கள் தனியார் தொலைபேசி மையங்களில் (எஸ்.டி.டி. பூத்) உள்ளூர் அழைப்புகளுக்கே நிமிடத்துக்கு 10 ரூபாய் வரை கொடுத்து பேச வேண்டிய அவல நிலை ஏற்பட்டு உள்ளது.

கா‌‌ஷ்மீரில் தொலைதொடர்பு சேவை சீராகாததால் பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து வருகின்றனர். அங்கு கடந்த மாத இறுதியிலேயே பள்ளிகளை திறக்க உத்தரவிடப்பட்ட போதும், மாணவர்கள் வராததால் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. அதே நேரம் 2019-20-ம் கல்வியாண்டின் புதிய மாணவர் சேர்க்கை நடவடிக்கையில் தனியார் பள்ளிகள் ஈடுபட்டு உள்ளன.இதற்கிடையே மொகரம் பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் போடப்பட்டிருந்த ஊரடங்கு நேற்று விலக்கப்பட்டது. எனினும் அந்த பகுதிகளில் 144 தடை உத்தரவு தொடர்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.


Next Story