பீகாரில் வெள்ளப்பெருக்கு: மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை


பீகாரில் வெள்ளப்பெருக்கு: மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை
x
தினத்தந்தி 1 Oct 2019 6:55 PM GMT (Updated: 1 Oct 2019 6:55 PM GMT)

பீகாரில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

பாட்னா,

பீகாரில் கடந்த சில நாட்களாக கொட்டித்தீர்த்த கனமழைக்கு 28 பேர் உயிரிழந்தனர். அங்கு மீட்பு பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, ‘மாநிலத்தின் 16 மாவட்டங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மீட்பு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினரை அனுப்பிவைக்க வேண்டும்’ என மத்திய அரசுக்கு, பீகார் மாநில அரசு அறிக்கை அனுப்பியது. இதைத்தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 20 குழுவினர் பீகாருக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் வெள்ளத்தில் சிக்கிய 900 பேரை மீட்டனர். மேலும், 2 விமானப்படை ஹெலிகாப்டர்களும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. இந்தநிலையில் பீகாரின் வெள்ள நிலவரம் குறித்து டெல்லியில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் ஆலோசனை கூட்டம் மத்திய மந்திரிசபை செயலாளர் ராஜீவ் கவுபா தலைமையில் நேற்று நடந்தது. அப்போது, பீகாரின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்த ராஜீவ் கவுபா, அங்கு மீட்பு, நிவாரணம் மற்றும் நெருக்கடியை மேற்கொள்ள மாநில அரசு கேட்கும் உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.


Next Story