இந்தியாவின் ஜி.டி.பி. 5 வருடத்தில் ரூ.3 லட்சம் கோடி அமெரிக்க டாலராக உயர்வு; பிரதமர் மோடி பேச்சு


இந்தியாவின் ஜி.டி.பி. 5 வருடத்தில் ரூ.3 லட்சம் கோடி அமெரிக்க டாலராக உயர்வு; பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 3 Nov 2019 4:32 AM GMT (Updated: 3 Nov 2019 5:12 AM GMT)

இந்தியாவின் ஜி.டி.பி.யானது கடந்த 5 வருட பா.ஜ.க. ஆட்சியில் ரூ.3 லட்சம் கோடி அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

பாங்காக்,

பிரதமர் மோடி தாய்லாந்து நாட்டுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  இதன்படி, தலைநகர் பாங்காக்கிற்கு நேற்று போய் சேர்ந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான இந்தியர்களும் கலந்து கொண்டு பிரதமரை வரவேற்றனர்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது.  இதைப்போல கிழக்கு ஆசிய உச்சி மாநாடு மற்றும் ஆசியான் உறுப்பு நாடுகள் உள்ளிட்ட 16 நாடுகளுக்கு இடையேயான பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையும் நாளை நடைபெறுகிறது.

இந்நிலையில், அந்நாட்டில் பிரதமர் மோடி பேசும்பொழுது, இந்தியாவில் இருப்பதற்கான சிறந்த நேரமிது.  நாட்டில் பல விசயங்கள் எழுவதும் வேறு சில விசயங்கள் வீழ்வதும் காணப்படுகின்றன.  இந்தியாவில் வர்த்தகம் செய்வது எளிது, வாழ்வது எளிது, அந்நிய நேரடி முதலீடு, வன பாதுகாப்பு, உரிமங்கள், உற்பத்திகள், உட்கட்டமைப்புகள் ஆகியவை வளர்ந்து வருகின்றன.

இதேபோன்று வரிகள், வரி விகிதங்கள், சிவப்பு நாடாமுறை (கடுமையான அலுவல் நடைமுறை), ஊழல், குடும்ப ஆட்சி முறை போன்றவை வீழ்ச்சி அடைந்து வருகின்றன.  இந்தியா ரூ.5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் என்ற பொருளாதார கனவை நோக்கி முன்னேறி கொண்டிருக்கிறது.

கடந்த 2014ம் ஆண்டு எனது அரசு பொறுப்பேற்றபொழுது, இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி ரூ.2 லட்சம் கோடி அமெரிக்க டாலராக இருந்தது.  5 வருடங்களில் அதனை ரூ.3 லட்சம் கோடி அமெரிக்க டாலராக நாங்கள் அதிகரிக்க செய்தோம்.  அதனாலேயே ரூ.5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் என்ற கனவு உண்மையாகும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது என்று பேசினார்.

Next Story