புறக்காவல் நிலைய சுவரை சேதப்படுத்திய மத்திய பிரதேச பா.ஜனதா எம்.பி. மீது வழக்கு


புறக்காவல் நிலைய சுவரை சேதப்படுத்திய மத்திய பிரதேச பா.ஜனதா எம்.பி. மீது வழக்கு
x
தினத்தந்தி 3 Nov 2019 9:00 PM GMT (Updated: 3 Nov 2019 8:27 PM GMT)

மத்திய பிரதேசத்தில் புறக்காவல் நிலைய சுவரை சேதப்படுத்திய பா.ஜனதா எம்.பி. உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போபால்,

மத்திய பிரதேசத்தின் திவாஸ் நகரில் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக புறக்காவல் நிலையத்துக்கு பதிலாக புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தால் தங்கள் வியாபாரம் பாதிக்கும் என அப்பகுதியை சேர்ந்த சில வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் திவாஸ் தொகுதி பா.ஜனதா எம்.பி. மகேந்திர சோலங்கியும், அவரது ஆதரவாளர்கள் சிலரும் நேற்று முன்தினம் இரவு அங்கு வந்தனர். அப்போது அவர்கள் புறக்காவல் நிலைய சுவரை சேதப்படுத்தியதாக தெரிகிறது. இது தொடர்பான காட்சிகள் அனைத்தும் அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் மகேந்திர சோலங்கி மற்றும் 3 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மகேந்திர சோலங்கி எம்.பி. மறுத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சம்பவ இடத்துக்கு தான் சென்றிருந்தாலும், புறக்காவல் நிலைய சுவரை தான் சேதப்படுத்தவில்லை என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே தன் மீது வழக்குப்பதிவு செய்ததற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர் சோலங்கியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பா.ஜனதா எம்.பி., அவரிடம் தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளிடம் போலீஸ் சூப்பிரண்டு புகார் தெரிவித்து உள்ளார்.

புறக்காவல் நிலைய சுவர் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் பா.ஜனதா எம்.பி. மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story