மராட்டியத்தில் விரைவில் நிலையான ஆட்சி அமையும்: காங்கிரஸ்


மராட்டியத்தில் விரைவில் நிலையான ஆட்சி அமையும்:  காங்கிரஸ்
x
தினத்தந்தி 20 Nov 2019 3:36 PM GMT (Updated: 20 Nov 2019 3:36 PM GMT)

மராட்டியத்தில் விரைவில் நிலையான ஆட்சி அமையும் என்று சரத் பவாரை சந்தித்த பின் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரிதிவிராஜ் சவான் தெரிவித்துள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவு தனிப்பெரும்பான்மை இல்லாததால், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரப்பகிர்வில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்,  பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட சிவசேனா,  காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.  இதற்கு மத்தியில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இன்று பிரதமர் மோடியை சந்தித்தது, மராட்டிய அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இந்த பரபரப்புக்கு மத்தியில்,  தேசியவாத காங்கிரஸ், சிவசேனா தலைவர்களுடன் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் 3 கட்சிகள் இடையே விரைவில் உடன்பாடு எட்டப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சம்மதம் தெரிவித்து விட்டார் என தகவல்கள் வெளியாகின. இதேபோன்று, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் அளித்த பேட்டியில், மகாராஷ்டிராவில் நாளை  ஆட்சியமைக்கப் போவது யார் என்பது தெரிந்து விடும் என்று கூறியிருந்தார். 

இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சந்தித்தனர்.  இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான, பிரிதிவிராஜ் சவான் கூறுகையில், “ காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இடையே நீண்ட நேரம்  நேர்மறையான விவாதங்கள் நடைபெற்றன.  ஆலோசனை தொடர்ந்து நடைபெறும். மராட்டியத்தில் நிலையான ஆட்சியை விரைவில் எங்களால் கொடுக்க முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார். 

Next Story