4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு


4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
x
தினத்தந்தி 8 Dec 2019 10:45 PM GMT (Updated: 8 Dec 2019 9:23 PM GMT)

ஐதராபாத்தில் பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தின் புறநகர் பகுதியில் பெண் டாக்டரை கற்பழித்து கொன்று பின்னர் உடலை தீ வைத்து எரித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேர் கடந்த வெள்ளிக்கிழமை போலீசாரால் ‘என்கவுண்ட்டர்’ மூலம் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கற்பழிப்பு குற்றவாளிகளை சுட்டுக்கொன்ற போலீசாருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்துக்கு 4 பேரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்ற போது அவர்கள் போலீசாரிடம் இருந்த துப்பாக்கியை பறித்து தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றதாகவும், இதனால் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. என்றாலும் இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த ஐதராபாத் ஐகோர்ட்டு, 4 பேரின் உடல்களையும் பாதுகாத்து வைக்கும்படி உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில், 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் ஜி.எஸ்.மணி, பிரதீப் குமார் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளனர்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஐதராபாத்தில் கடந்த மாதம் 28-ந் தேதி இரவு பெண் டாக்டர் கற்பழித்து கொல்லப்பட்டது பொதுமக்களிடையே மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார் சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றி இருக்கிறார்கள். குற்றச்சாட்டுகளை பதிவு செய்தல், வழக்கு விசாரணை போன்ற எந்த சட்ட நடைமுறையும் இல்லாமல் 4 பேரும் கொல்லப்பட்டு உள்ளனர்.

எனவே இது தொடர்பாக ஐதராபாத் போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார் உள்ளிட்ட போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். மேலும் இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு குழு அல்லது வெளிமாநில சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

ஐதராபாத் போலி ‘என் கவுண்ட்டர்’ தொடர்பான ஆவணங்களை கோர்ட்டு கேட்டு பெறவேண்டும். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும், சட்டத்தை ஒவ்வொருவரும் கையில் எடுத்துக்கொள்வதை தடுக்கவும் இதுபோன்ற வழக்குகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கவேண்டியது கோர்ட்டின் கடமை ஆகும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இதேபோல் எம்.எல்.சர்மா என்ற வக்கீலும் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்து இருக்கிறார்.

அவர் தனது மனுவில், கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரை சுட்டுக்கொன்றது அரசியல் சாசனத்தின் 21-வது பிரிவுக்கு (வாழும் உரிமை மற்றும் நியாயமான விசாரணை) எதிரானது என்றும், எனவே இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு குழு அமைத்து சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதிகளின் மேற்பார்வையில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு உள்ளார்.


Next Story