2019 நாடாளுமன்ற தேர்தல் ஒப்புகை சீட்டுகள்: தேர்தல் கமிஷனுக்கு டெல்லி ஐகோர்ட்டு முக்கிய உத்தரவு


2019 நாடாளுமன்ற தேர்தல் ஒப்புகை சீட்டுகள்: தேர்தல் கமிஷனுக்கு டெல்லி ஐகோர்ட்டு முக்கிய உத்தரவு
x
தினத்தந்தி 14 Jan 2020 10:04 PM GMT (Updated: 14 Jan 2020 10:04 PM GMT)

2019 நாடாளுமன்ற தேர்தல் ஒப்புகை சீட்டுகள் தொடர்பாக, தேர்தல் கமிஷனுக்கு டெல்லி ஐகோர்ட்டு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லி ஐகோர்ட்டில் ஹன்ஸ்ராஜ் ஜெயின் என்பவர் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது, ‘விவிபாட்’ ஒப்புகை சீட்டு எந்திரங்கள் வாங்க மத்திய அரசிடமிருந்து தேர்தல் கமிஷன் ரூ.3 ஆயிரத்து 173 கோடி பெற்றது. ஆனால், அந்த தேர்தலில் 373 தொகுதிகளில், பதிவான ஓட்டுகளுக்கும், எண்ணப்பட்ட ஓட்டுகளுக்கும் இடையே முரண்பாடு இருப்பது தேர்தல் கமிஷன் இணையதளத்திலேயே தெளிவாகி உள்ளது.

ஓட்டுப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு நடந்திருக்கும் என்று என்னைப் போன்ற வாக்காளர்கள் மனதில் இது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே, அந்த தேர்தலில் எல்லா தொகுதிகளிலும் பதிவான ஒப்புகை சீட்டுகளை ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும். வருங்காலங்களில், ஒப்புகை சீட்டுகளையும் எண்ண உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை விசாரித்த தலைமை நீதிபதி டி.என்.படேல் தலைமையிலான அமர்வு, இந்த பொது நல மனுவை ஒரு புகார் மனுவாக கருதி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டது. மனுவை முடித்து வைத்தது.


Next Story