இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 49 ஆயிரத்தை தாண்டியது; ஒரே நாளில் 111 பேர் பலி


இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 49 ஆயிரத்தை தாண்டியது; ஒரே நாளில் 111 பேர் பலி
x
தினத்தந்தி 6 May 2020 11:45 PM GMT (Updated: 6 May 2020 11:10 PM GMT)

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 49 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இந்த வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 111 பேர் பலியாகி உள்ளனர்.

புதுடெல்லி, 

உலக நாடுகள் முழுவதிலும் தனது பெயரை நிலைநாட்டி அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா, இந்தியாவிலும் தனது வேலையை காட்டத் தொடங்கிவிட்டது. ஆரம்பத்தில் இந்த வைரசால் தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்து வந்தது. சரியான நேரத்தில் ஊரடங்கை அமல்படுத்தி கொரோனா பரவும் வேகத்தை இந்தியா கட்டுப்படுத்தி உள்ளது என்று உலக சுகாதார மையமே பாராட்டு தெரிவித்து இருந்தது.

ஆனால் கடந்த சில தினங்களாக நிலைமை மோசமடைய தொடங்கி உள்ளது. தினசரி வைரஸ் பாதிப்புக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை 500-க்கும் கீழே இருந்த நிலை மாறி, திடீரென ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்தநிலையில் உச்சபட்சமாக கடந்த 2-ந் தேதி 2,411 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து தொடர்ந்து வேகமெடுத்த கொரோனா அடுத்தடுத்த நாட்களில் முறையே 2,487, 2,573, 3,875 பேரை பாதிப்புக்கு உள்ளாக்கியது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் காலை, மாலை என இருமுறை அறிவித்து வந்தது. இந்தநிலையில் இனி காலையில் மட்டுமே இந்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று அந்த அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

அதன்படி நேற்று காலை வெளியிட்ட புள்ளி விவரத்தில் கொரோனாவால் புதிதாக 2,680 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 49,391 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த கொரோனா தாக்குதலில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கையும் 1,583-ல் இருந்து 1,694 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி ஒரே நாளில் 111 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதில் அதிகபட்சமாக குஜராத்தில் 49 பேர் பலியாகி உள்ளனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் மூன்று மாநிலங்களாக மராட்டியம், குஜராத், டெல்லி உள்ளன. மராட்டியத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துவிட்டது. அங்கு மொத்தம் 15,525 பேரை பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ள கொரோனா, 617 பேரின் உயிரையும் பறித்துவிட்டது.

குஜராத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தையும், டெல்லியில் 5 ஆயிரத்தையும் தாண்டிவிட்டது.

Next Story