டெல்லியில் கொரோனா வைரசின் தாக்கம் சமூக பரவலாக மாறவில்லை: மணீஷ் சிசோடியா


டெல்லியில் கொரோனா வைரசின் தாக்கம் சமூக பரவலாக மாறவில்லை: மணீஷ் சிசோடியா
x
தினத்தந்தி 9 Jun 2020 5:47 PM GMT (Updated: 9 Jun 2020 5:47 PM GMT)

டெல்லியில் கொரோனா வைரசின் தாக்கம் சமூக பரவலாக மாறவில்லை என்று அம்மாநில துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கொரோனா வைரசின் தாக்கம் சமூக பரவலாக மாறவில்லை என்றும், கொரோனா வைரஸ் பாதிப்புகள் வரும் ஜூலை 31ம் தேதிக்குள் 5.5 லட்சம் இருக்க வாய்ப்புள்ளது என்றும் அம்மாநில துணை முதல்-,மந்திரி மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். 

டெல்லி மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் டெல்லிவாசிகளுக்கே ஒதுக்கப்படும் என்று அம்மாநில அரசின் அதிரடி அறிவிப்பை, துணை நிலை ஆளுநர் ரத்து செய்துள்ள நிலையில் இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார். 

இன்று துணை நிலை ஆளுநர் அனில் பைஜல் மற்றும் மத்திய அரசின் உயர் மட்ட அதிகாரிகளை சந்தித்தப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “டெல்லியின் நோய் தொற்று இரட்டிப்பு விகிதம் 12 - 13 நாட்களாக உள்ளன. இதனால் ஜூலை மாத இறுதிக்குள் 5.5 லட்சம் கொரோனா பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்போது நமக்கு 80,000 மருத்துவமனை படுக்கைகள் தேவைப்படும். இந்த கணக்கீடுகளை கவனத்தில் கொண்டு டெல்லி அரசின் மருத்துவமனை படுக்கைகள் குறித்தான உத்தரவை ரத்து செய்ததை மறுபரிசீலனை செய்யுமாறு ஆளுநருக்கு கோரிக்கை வைத்துள்ளோம். மத்திய அரசால் நடத்தப்படும் மருத்துவமனைகள் அனைவருக்கும் பயன்படுத்தப்படும். ஆனால் ஆளுநர், தன் முடிவில் மாற்றம் செய்ய முடியாது எனத் தெரிவித்துள்ளார். மேலும், டெல்லி நகரில், கொரோனா வைரஸ் சமூகப் பரவலாக இன்னும் ஆரம்பிக்கவில்லை, எனவே இது குறித்து விவாதிக்க தேவையில்லை என்றும் அவர் கூறினார்.

Next Story