அதிகரித்து வரும் கொரோனா தொற்றை அரசு எப்படி தடுக்கப்போகிறது? பிரதமர் மோடி பதிலளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்


அதிகரித்து வரும் கொரோனா தொற்றை அரசு எப்படி தடுக்கப்போகிறது? பிரதமர் மோடி பதிலளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 8 Sep 2020 3:08 AM GMT (Updated: 8 Sep 2020 3:08 AM GMT)

நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை அரசு எவ்வாறு தடுக்கப்போகிறது? என பிரதமர் மோடி பதிலளிக்குமாறு காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

புதுடெல்லி, 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து 2-வது நாளாக 90 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதனால் நோய் பாதிப்பில் உலக அளவில் 2-வது இடத்தை இந்தியா பிடித்து உள்ளது.

இவ்வாறு அதிகரித்து வரும் கொரோனா தொற்று விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாககட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா நேற்று மெய்நிகர் முறையில் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது:-

அலட்சியம், திறமையின்மை மற்றும் தோல்வியடைந்த தலைமை ஆகியவற்றால் நாட்டில் கொரோனா நிலைமை இவ்வளவு மோசமாகி உள்ளது. மக்கள் தங்களை தாங்களே தற்காத்துக்கொள்ளுமாறு அரசுவிட்டு விட்டது.

காங்கிரஸ் கட்சியும், மருத்துவ நிபுணர்களும் எச்சரிக்கை விடுத்தும் கூட, ‘பரிசோதி, கண்டுபிடி, தனிமைப்படுத்து, சிகிச்சையளி’ என்ற கொள்கையை கடைப்பிடித்து தொற்றை கட்டுப்படுத்தவில்லை. பரிசோதனையை அதிகரிக்கும் தேவை இருந்தபோதும், அதை புறந்தள்ளியதுடன், ஊரடங்கு காலத்தில் கூட நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போது அதிகரித்து வரும் தொற்றை அரசு எப்படி கட்டுப்படுத்தப்போகிறது? இதற்காக என்ன உத்தியை பின்பற்ற வேண்டும் என்பதை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். தனது தோல்வியடைந்த தலைமை குறித்து பதிலளிப்பாரா?

கொரோனா தொற்று தற்போது சிறிய நகரங்கள், கிராமங்களிலும் பரவி வருகிறது. ஆனால் மோடி அரசு இன்னும் அறியாமை மற்றும் அலட்சியத்திலேயே இருக்கிறது. இது மிகப்பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். ஏனெனில் 65 சதவீத மக்கள் கிராமப்புறங்களிலேயே வசிக்கின்றனர்.

இந்தியா கொரோனாவின் 2-வது அலையை சந்தித்து வருவதாக ஏராளமான நிபுணர்கள் கணித்துள்ளனர். சமூக பரவல் தொடங்கியுள்ளதாகவும் சிலர் கூறியுள்ளனர். ஆனால் மோடி அரசு இதை அறியவோ, ஒப்புக்கொள்ளவோ இல்லை.

வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை பிரதமர் மோடி எவ்வாறு மேம்படுத்துவார். இதற்கு மத்திய அரசிடம் தீர்வு உள்ளதா? அல்லது கடவுள் மேல் பழி சுமத்துவார்களா? இவ்வாறு சுர்ஜேவாலா கேள்வி எழுப்பினார்.

Next Story