ஐதராபாத்தில் ரூ.3¾ கோடி பறிமுதல்; 4 பேர் கைது


ஐதராபாத்தில் ரூ.3¾ கோடி பறிமுதல்; 4 பேர் கைது
x
தினத்தந்தி 15 Sep 2020 10:08 PM GMT (Updated: 15 Sep 2020 10:08 PM GMT)

ஐதராபாத் நகர போலீசார், 4 நபர்களிடம் இருந்து ரொக்கப் பணமாக ரூ.3 கோடியே 75 லட்சத்து 30 ஆயிரத்தை கைப்பற்றினர். அவர்களிடம் இருந்து 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

ஐதராபாத்,

போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த நம்பத்தகுந்த தகவலை அடுத்து போலீசார் வாகன தணிக்கை செய்து 4 பேரை கைது செய்தனர். இவர்கள் பஞ்சாரா ஹில்ஸ் அருகே 2 கார்களில் சரியான ஆவணங்களின்றி அதிக அளவிலான ரொக்கப் பணத்துடன் சென்று கொண்டிருந்தபோது மடக்கிப்பிடித்து கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் 4 பேரும், ஆமதாபாத்தைச் சேர்ந்த கமலேஷ் ஷா என்பவர் மும்பையில் நடத்தி வரும் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் என்று கூறினார்கள். இந்த நிறுவனத்தின் கிளை பஞ்சாரா ஹில்ஸ் பகுதியிலும் செயல்படுவதாகவும், ஐதராபாத்தில் பிரித்த ரொக்கப்பணத்தை, சோலாப்பூருக்கு கொண்டு சென்றதாகவும் கைதானவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் முறையான ஆவணங்கள் இல்லாததால் கைப்பற்றப்பட்ட பணம், சட்ட நடவடிக்கைக்காக வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story