உத்தர பிரதேசத்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - 2 பேர் கைது


உத்தர பிரதேசத்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - 2 பேர் கைது
x
தினத்தந்தி 17 Oct 2020 4:29 AM GMT (Updated: 17 Oct 2020 4:29 AM GMT)

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், 15 வயது தலித் சிறுமி கடந்த வியாழக்கிழமை இரவு வயலுக்குச் சென்றபோது இரண்டு நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இதன் பின்னர் அங்கிருந்து தப்பித்து தனது வீட்டிற்குச் சென்ற அந்த சிறுமி, தனது பெற்றோரிடம் இது குறித்து கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து இது பற்றி போலீசாரிடம் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், அதே ஊரைச் சேர்ந்த கோவிந்த் பால்மிகி(வயது 19) மற்றும் அஜய் போதன்(வயது 30) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவர் மீதும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து கான்பூர் எல்லை துணை காவல் கண்காணிப்பாளர் பிரீதிந்தர் சிங் கூறிய போது, “வியாழக்கிழமை இரவு சிறுமி வயலுக்குச் சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. சமூக சுகாதார மையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை  நடத்தப்பட்டுள்ளது. அதன் அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. இந்த சம்பவத்தில் காவல்துறை உடனடியாக செயல்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்துள்ளது” என்று தெரிவித்தார்.

Next Story