நதிநீர் பிரச்சினைகளை விவாதிக்க தென்மண்டல கவுன்சில் கூட்டம்; அமித்ஷா தலைமையில் மார்ச் 4-ந் தேதி திருப்பதியில் நடக்கிறது


நதிநீர் பிரச்சினைகளை விவாதிக்க தென்மண்டல கவுன்சில் கூட்டம்; அமித்ஷா தலைமையில் மார்ச் 4-ந் தேதி திருப்பதியில் நடக்கிறது
x
தினத்தந்தி 27 Feb 2021 4:32 PM IST (Updated: 27 Feb 2021 4:32 PM IST)
t-max-icont-min-icon

நதிநீர் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக, தென்மண்டல கவுன்சில் கூட்டம் அமித்ஷா தலைமையில் மார்ச் 4-ந் தேதி திருப்பதியில் நடக்கிறது.

8 மாநிலங்கள்
தென்மாநிலங்களின் நதிநீர் பிரச்சினை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க தென்மண்டல கவுன்சில் என்ற அமைப்பு உள்ளது. இதில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்கள் உறுப்பினர்களாகவும், அந்தமான், லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்கள் சிறப்பு அழைப்பாளர்களாகவும் உள்ளன.

தென்மண்டல கவுன்சிலின் 29-வது கூட்டம், ஆந்திர மாநிலம் திருப்பதியில் மார்ச் 4-ந் தேதி நடக்கிறது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை தாங்குகிறார்.

முதல்-மந்திரிகள்
தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதல்-மந்திரிகள் மற்றும் துணைநிலை கவர்னர்கள், நிர்வாகிகள் ஆகியோர் இதில் கலந்து கொள்கிறார்கள். தங்கள் மாநிலத்தின் தலைமை செயலாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் சேர்ந்து பங்கேற்கிறார்கள்.

இந்த கூட்டத்தில், நதிநீர் பங்கீட்டு பிரச்சினை முக்கியமாக விவாதிக்கப்படுகிறது. தமிழ்நாடு-கர்நாடகா இடையிலான காவிரி பிரச்சினை, தமிழ்நாடு-கேரளா இடையிலான முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை ஆகியவை பற்றி ஆலோசிக்கப்படுகிறது.

தென்னிந்திய நதிகள் இணைப்பு
ஆந்திரா-தெலுங்கானா இடையிலான கிருஷ்ணா, கோதாவரி நதிகளின் பங்கீட்டு பிரச்சினை, அங்கு 2 மாநிலங்களும் தன்னிச்சையாக தொடங்கி உள்ள போலாவரம், காலேஸ்வரம் ஆகிய திட்டங்கள் குறித்தும் பேசப்படுகிறது. இதுதொடர்பாக இரு மாநிலங்களும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்ட அறிக்கை தயாரித்து வைத்துள்ளனர்.

ஆந்திரா-தெலுங்கானா-கர்நாடகா ஆகிய 3 மாநிலங்கள் இடையிலான அலமாதி அணை பிரச்சினை பற்றியும் விவாதிக்கப்படுகிறது. மேலும், தென்னிந்தியாவின் முக்கிய நதிகளான கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, பெண்ணாறு, மகாநதி ஆகியவற்றை இணைத்து நதிநீர் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பது பற்றியும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

Next Story