டெல்லியில் தற்போது கொரோனா தடுப்பூசிகள் இல்லை - சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 29 April 2021 10:03 AM GMT (Updated: 29 April 2021 10:03 AM GMT)

டெல்லியில் தற்போது கொரோனா தடுப்பூசிகள் இல்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

டெல்லியில் கொரோனா பரவலின் 2ஆம் அலை மிக மோசமாக உள்ளது. இதனால் அம்மாநிலத்திலுள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் ஏற்கனவே நிரம்பிவிட்டன. கொரோனா நோயாளிகளுக்கு தடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் சிகிச்சை போதுமானதாக இல்லை என்றும் கூறப்படுகிறது. நிலைமை மோசமாவதைத் தடுக்க டெல்லி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் டெல்லியில் தற்போது கொரோனா தடுப்பூசிகள் இல்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தெரிவிக்கையில், “டெல்லியில் தற்போது கொரோனா தடுப்பூசிகள் இல்லை. தடுப்பூசி நிறுவனங்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது எப்போது வரும் என்று உங்களுக்குத் தெரிவிப்போம். டெல்லியில் கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது” என்று அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்தார். 

இந்த அறிக்கை பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, ஏனெனில் தடுப்பூசி இயக்கத்தின் மூன்றாம் கட்டத்திற்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது. தடுப்பூசி இயக்கத்தின் மூன்றாவது கட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி பெற அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story