பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு


பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு
x
தினத்தந்தி 11 Jun 2021 8:34 AM GMT (Updated: 11 Jun 2021 8:34 AM GMT)

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று சந்தித்தார்.

டெல்லி,

உத்தரபிரதேசத்தில் 2022 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் அம்மாநிலத்தில் தனது அரசியல் நகர்வுகளை பாஜக தற்போதே தொடங்கி விட்டது.

உத்தரபிரதேசத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதனால், வரும் தேர்தலில் யோகி ஆதித்தநாத்திற்கு பதிலாக வேறு நபரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகின.

ஆனால், இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 2022 ஆம் ஆண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தலை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் தலைமையின் கீழ் தான் சந்திக்கும் என்று அம்மாநில பாஜக தலைவர் சுவேந்திர தேவ் சிங் தெரிவித்தார். இதன் மூலம், 2022 நடைபெற உள்ள உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் முதல்-மந்திரி வேட்பாளராக யோகி ஆதித்யநாத் மீண்டும் களமிறங்க உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. 

ஆனால், சட்டசபை தேர்தலை யோகி ஆதித்யநாத்தின் தலைமையின் கீழ் சந்திக்க அம்மாநில பாஜக தலைவர்கள் பலர் விரும்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 

இதனால்,  உத்தரபிரதேச பாஜக கட்சியினர் இடையே குழப்பமான சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும், பாஜக கட்சித்தலைமையும் யோகி ஆதித்யநாத் மீது அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பரபரப்பான சூழ்நிலையில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அவர் நேற்று உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். 

தனது பயணத்தின் இரண்டாவது நாளான இன்று யோகி ஆதித்யநாத் பிரதமர் மோடியை சந்தித்தார்.

இந்த சந்திப்பிற்கு, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை, யோகி ஆதித்யநாத் தற்போது சந்தித்தார். இந்த சந்திப்பின் போது உத்தரபிரதேச தேர்தல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஜேபி நட்டா மற்றும் யோகி ஆதித்யநாத் இடையே ஆலோசனை நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

யோகி ஆதித்யநாத் மீது பாஜக தலைமை அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜேபி நட்டா உடனான அடுத்தடுத்த சந்திப்புகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.

Next Story