நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 44வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 12 Jun 2021 5:00 AM GMT (Updated: 12 Jun 2021 5:00 AM GMT)

மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 44வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் காணொலி மூலம் நடைபெற உள்ளது.

புதுடெல்லி, 

உள்நாட்டில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகளுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது. கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஆகியவற்றுக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது. இதுபோன்ற மருந்துகள், மருத்துவ உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 

ஆனால், கடந்த மாதம் 28-ந் தேதி நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், இதுதொடர்பாக பா.ஜனதா ஆளும் மாநிலங்களுக்கும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், இதுகுறித்து ஆய்வு செய்து பரிந்துரைப்பதற்காக மந்திரிகள் குழு ஒன்றை ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைத்தது. அந்த மந்திரிகள் குழு, கடந்த 7-ந் தேதி தனது அறிக்கையை சமர்ப்பித்தது.

இந்நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக முடிவு எடுப்பதற்காக, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 44வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. 

அதில், மந்திரிகள் குழுவின் அறிக்கை பரிசீலிக்கப்படும். மருத்துவ ஆக்சிஜன், பல்ஸ் ஆக்சிமீட்டர், கிருமிநாசினிகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், வென்டிலேட்டர்கள், தனிநபர் கவச உடைகள், என்-95 ரக முக கவசங்கள், தடுப்பூசிகள், உடல் வெப்பநிலை பரிசோதிக்கும் கருவி, கொரோனா பரிசோதனை உபகரணங்கள் மற்றும் கொரோனா, கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் ஆகியவற்றுக்கு வரி குறைப்போ அல்லது வரி விலக்கோ அளிப்பது பற்றி ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவு எடுக்கிறது.

இந்த கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணைமந்திரி அனுராக் தாகூர் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உட்பட மற்ற மாநில நிதிமந்திரிகள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் காணொலி மூலம் பங்கேற்க உள்ளனர்

மந்திரிகள் குழுவில் இடம்பெற்ற மாநில நிதி மந்திரிகள் பலர், வரி குறைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story