காஷ்மீரில் பொதுமக்களை வெளியேற்றி தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வீரர்கள்


காஷ்மீரில் பொதுமக்களை வெளியேற்றி தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வீரர்கள்
x
தினத்தந்தி 28 Jun 2021 1:26 PM GMT (Updated: 28 Jun 2021 1:26 PM GMT)

காஷ்மீரில் என்கவுண்ட்டரை முன்னிட்டு பொதுமக்களை வீரர்கள் பாதுகாப்பு பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த சில நாட்களாக எதிர்பாராத வகையில் திடீர் தாக்குதல்கள் நடந்து வருகின்றன.  ஜம்மு விமானப்படை தளத்தில் நேற்று அடுத்தடுத்து 2 முறை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டன.  இதனை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஹரிபரிகம் என்ற கிராமத்தில் நேற்று இரவு முன்னாள் போலீஸ் அதிகாரி பயஸ் அகமது, மனைவி ராஜ பேகம் ஆகியோரை பயங்கரவாதிகள் வீடு புகுந்து சுட்டு கொன்றனர்.

இதில் படுகாயமடைந்த போலீஸ் அதிகாரியின் மகள் ராபியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  முன்னாள் போலீஸ் அதிகாரியை சுட்டுவிட்டு தப்பிச்சென்ற பயங்கரவாதியை ராணுவ வீரர்கள் தேடி வருகின்றனர். அந்த பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் மல்ஹூரா பரிம்போரா பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து பயங்கரவாதிகளை ஒழிக்கும் அதிரடி வேட்டையில் இன்று ஈடுபட்டு உள்ளனர்.

இதனை முன்னிட்டு அந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்களை வெளியேற்றி வேறு இடங்களுக்கு செல்லும்படி வீரர்கள் அனுப்பி வைத்தனர்.  இதனால், என்னவென்று தெரியாத மக்கள் உடனடியாக தங்களது வீடுகளை அப்படியே போட்டு விட்டு குடும்பத்துடன் பாதுகாப்பு பகுதிக்கு சென்றனர்.  தொடர்ந்து பயங்கரவாத தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.


Next Story