தேவேந்திர பட்னாவிஸ் பேட்டியால் மராட்டிய அரசியலில் பரபரப்பு


தேவேந்திர பட்னாவிஸ் பேட்டியால் மராட்டிய அரசியலில் பரபரப்பு
x
தினத்தந்தி 5 July 2021 6:08 AM GMT (Updated: 5 July 2021 6:08 AM GMT)

சிவசேனா பாஜகவின் எதிரி அல்ல, நண்பர் தான் என்று மரட்டிய முன்னாள் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலை பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து சந்தித்தன. தேர்தலில் அந்த கூட்டணி வெற்றி பெற்றது. பா.ஜனதா 100-க்கும் மேற்பட்ட இடங்களிலும், சிவசேனா 50-க்கும் அதிகமான இடங்களிலும் வெற்றி பெற்றன. 

ஆனால் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட மோதல் காரணமாக அந்த கூட்டணி உடைந்தது.  சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் சேர்ந்து மகாவிகாஸ் அகாடி அரசை அமைத்தது. 

இந்த நிலையில், மராட்டிய முன்னாள் முதல் மந்திரியும் அம்மாநில பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் நேற்று பேட்டி அளித்தார். அப்போது, 

‘எங்கள் நண்பன் (சிவசேனா) கடந்த 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எங்களுடன் சேர்ந்து போட்டியிட்டது. ஆனால் தேர்தலுக்கு பிறகு அவர்கள், நாங்கள் யாரை (காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்) எதிர்த்து போட்டியிட்டோமோ அவர்களுடன் கைகோா்த்து கொண்டார். எனினும் அரசியலில் சாத்தியமற்றது என்று எதுவும் கிடையாது. 

சிவசேனாவும், பா.ஜனதாவும் எதிரிகள் கிடையாது. சில விஷயங்களில் எங்களுக்குள் வேறுபாடுகள் இருக்கலாம். சூழல்நிலைக்கு ஏற்றவாறு முடிவுகள் எடுக்கப்படும்” இவ்வாறு அவர் கூறினார். தேவேந்திர பட்னாவிசின் இந்தப் பேட்டி மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தேவேந்திர பட்னாவிசின் பேச்சு குறித்து சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சஞ்செய் ராவத் கூறியதாவது:- நாங்கள் இந்தியா- பாகிஸ்தான் கிடையாது.  எங்களின் அரசியலில் வெவ்வேறாக இருந்தாலும் நட்பு அப்படியேதான் நீடிக்கும்” என்றார்.  

Next Story