பெட்ரோல், டீசல் விலை உயர்வு; புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் மாட்டு வண்டி ஓட்டி போராட்டம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வு; புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் மாட்டு வண்டி ஓட்டி போராட்டம்
x
தினத்தந்தி 12 July 2021 7:47 AM GMT (Updated: 12 July 2021 7:47 AM GMT)

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி மாட்டு வண்டி ஓட்டி சென்று போராட்டத்தில் ஈடுபட்டார்.



புதுச்சேரி,

புதுச்சேரி காங்கிரஸ் சார்பில் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் நடந்து வருகிறது.  இதனை முன்னிட்டு புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி காரைக்காலில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டார்.

காரைக்காலுக்கு முதன்முறையாக தேர்தலுக்கு பின் வந்த அவரை பூவம் எல்லையில் மாவட்ட தலைவர் ஆர்.பி. சந்திரமோகன் தலைமையில் கட்சியினர் வரவேற்றனர்.  இதன்பின்பு, காரைக்கால் தலத்தெரு பகுதியிலிருந்து நாராயணசாமி மாட்டு வண்டியை நகர பகுதி நோக்கி ஓட்டி வந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்த போராட்டத்தில் புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிலையிலான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  போராட்ட முடிவில் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆலோசனையின்பேரில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கட்சியின் அனைத்து நிலையினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் 130 டாலராக இருந்தபோது, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.65-க்கும், டீசல் ரூ.53-க்கும், கியாஸ் சிலிண்டர் ரூ.350-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மத்தியில் நரேந்திரமோடி ஆட்சியிலிருக்கும்போது கச்சா எண்ணெய் விலை பேரல் 70 டாலராக இருக்கும் நிலையில், பெட்ரோல் லிட்டர் ரூ.101-க்கும், டீசல் லிட்டர் ரூ.94-க்கும், கியாஸ் சிலிண்டர் ரூ.850-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன் மூலம் மத்திய அரசு ரூ.4 லட்சம் கோடி வருவாய் ஈட்டுகிறது. இந்தியாவில் இருந்துதான் நேபாளத்துக்கு பெட்ரோல் அனுப்பப்படுகிறது.
அங்கு லிட்டர் ரூ.70-க்கும் விற்கும்போது, இந்தியாவில் மட்டும் உச்சபட்ச விலை விற்பதால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் காய்கனி, மளிகை, வாகனங்கள் உள்ளிட்ட பல பொருள்களின் விலையேறிவிட்டது.

மோடி அரசு மக்களை பற்றி கவலைப்படவில்லை. கொரோனா தொற்று பரவலால் வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டிருக்கும் நிலையில், மத்திய அரசின் அலட்சியப்போக்கு மக்களை பெருமளவு பாதிக்க செய்துள்ளது. உடனடியாக எரிபொருள் விலையை காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் விற்பனை செய்ததுபோல குறைக்காவிட்டால், நரேந்திரமோடி பதவி விலக வலியுறுத்தும் கோஷத்தை முன்வைத்து காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபடும் என்றார்.


Next Story