ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிறேனா? சரத் பவார் விளக்கம்


ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிறேனா? சரத் பவார் விளக்கம்
x
தினத்தந்தி 14 July 2021 4:53 PM GMT (Updated: 14 July 2021 4:53 PM GMT)

2024 நாடாளுமன்றத் தேர்தலில் எந்த அணிக்கும் தலைமையேற்கும் எண்ணம் இல்லை என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

மும்பை,

பிரபல தேர்தல்  வியூக நிபுணர்  பிரசாந்த் கிஷோர் மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் ஆகியோரைச் சந்தித்து அண்மையில்  ஆலோசனை நடத்தினார். 

பிரசாந்த் கிஷோரின் இந்த சந்திப்பு இந்திய அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் அந்தச் சந்திப்பின் மூலம் பிரசாந்த் கிஷோர் அரசியல் வியூக வகுப்பாளராகத் தொடர்ந்து செயல்படுவார் என்று பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், அவர் தரப்பிலிருந்து எந்தவித அறிவிப்பும் அது குறித்து வெளியாகவில்லை.

மேற்கு வங்க சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மூன்று முறை  பிரசாந்த் கிஷோர் சரத்பவாரை சந்தித்தார். சரத் பவாரின் புதுடெல்லி இல்லத்தில் நடந்த இந்த கூட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். அடுத்தடுத்த இந்த சந்திப்புகள் பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்தன. குறிப்பாக எதிரக்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக சரத் பவார் முன்னிறுத்தப்படுகிறாரா? என்ற கேள்விகளும் அரசியல் வட்டரத்தில் பரவலாக எழுந்தன. 

இந்த நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள சரத் பவார்,   “ஜனாதிபதி வேட்பாளராக நான் முன்னிறுத்தப்பட உள்ளேன் என்ற தகவல் முற்றிலும் தவறானது. 300- க்கும் மேற்பட்ட எம்.பிக்களை கொண்ட கட்சியால் அளிக்கப்படும் முடிவுகள் என்னவாக இருக்கும் என்பதை நான் அறிவேன்.  எனவே, நான் ஜனாதிபதி வேட்பாளராக இருக்க மாட்டேன்.

 பிரஷாந்த் கிஷோர் என்னை இருமுறை சந்தித்துப் பேசினார்.  ஆனால், அவரது கம்பெனி ஒன்று குறித்து மட்டுமே நாங்கள் பேசினோம். 2024- பாராளுமன்ற தேர்தல் குறித்தோ, ஜனாதிபதி தேர்தல் குறித்தோ எதுவும் பேசவில்லை. 

தேர்தல் உத்திகள் வகுப்பதில் இருந்து தான் விலகி விட்டதாக பிரஷாந்த் கிஷோர் கூறினார்.  தேர்தலுக்கு இன்னும் நீண்ட காலம் இருப்பதால் அது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.  அரசியல் சூழல் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். 2024 ஆம் ஆண்டு தேர்தலில் நான் எந்த ஒரு தலைமை பொறுப்பையும் ஏற்க மாட்டேன்” என்றார். 

Next Story