மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு; ரூ.75 ஆயிரம் கோடி வழங்கியது மத்திய அரசு


மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு; ரூ.75 ஆயிரம் கோடி வழங்கியது மத்திய அரசு
x
தினத்தந்தி 15 July 2021 11:12 PM GMT (Updated: 15 July 2021 11:12 PM GMT)

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீட்டை ஈடு செய்ய மத்திய அரசு ரூ.75 ஆயிரம் கோடியை வழங்கியுள்ளது.

புதுடெல்லி,

ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு சேவை வரி கவுன்சில் கூட்டம் கடந்த மே மாதம் 28-ந் தேதி நடந்தது. அந்த கூட்டத்தில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி. இழப்பீட்டு நிதித்தொகுப்பில் போதுமான நிதி இல்லாத காரணத்தால், மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்குவதில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை ஈடு கட்டுவதற்கு ரூ.1 லட்சத்து 59 ஆயிரம் கோடியை மத்திய அரசு கடனாக வாங்கி கடனாக (பேக் டூ பேக் லோன்) மாநிலங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.

அந்த வகையில் இப்போது ஜி.எஸ்.டி. இழப்பீடுக்கு பதிலாக, மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு கடன் வாங்கி நேற்று ரூ.75 ஆயிரம் கோடியை வழங்கியுள்ளது. இது வழக்கமாக 2 மாதங்களுக்கு ஒரு முறை உண்மையாக வசூலாகிற செஸ் வரி வசூலில் இருந்து தருகிற ஜி.எஸ்.டி. இழப்பீட்டுடன் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய நிதி நடப்பு நிதி ஆண்டின் பிற்பாதி பகுதியில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story