மராட்டியம்: நிலச்சரிவில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு; மந்திரி அறிவிப்பு


மராட்டியம்:  நிலச்சரிவில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு; மந்திரி அறிவிப்பு
x
தினத்தந்தி 23 July 2021 9:22 PM GMT (Updated: 23 July 2021 9:22 PM GMT)

மராட்டியத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மந்திரி அறிவித்து உள்ளார்.

மும்பை,



மராட்டிய மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.  இதனால், வியாழக்கிழமை மாலை பல மாவட்டங்களில் நிலச்சரிவு மற்றும் பலத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மராட்டிய மாநிலத்தின் கடலோர மாவட்டமான ராய்காட்டில் மகாத் தெஹ்சில் மற்றும் அதனை சுற்றி நிலச்சரிவு ஏற்பட்டது.  இதற்கிடையில், கோலாப்பூர் மாவட்டத்தில் 47 கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. பலத்த மழை காரணமாக  சாலைகள் நீரில் மூழ்கின.

தொடர்ந்து மீட்பு பணிக்காக இரண்டு கடற்படை மீட்பு குழுக்கள் ராய்காட் மாவட்டத்தில் உள்ள மஹாத்துக்கும், 5 குழுக்கள் ரத்னகிரி மாவட்டத்தில் சிப்லூனுக்கும் சென்றுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படை (என்.டி.ஆர்.எஃப்) மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற உதவி வருகிறது.

ராய்காட் மாவட்டம் மகாத் தெஹ்சிலில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றது.  அருகில் உள்ள பகுதியில் மூன்று வெவ்வேறு நிலச்சரிவு சம்பவங்கள் நடந்தன.  மொத்தம் 32 உடல்கள் ஓரிடத்தில் இருந்தும், 4 உடல்கள் மற்ற இடங்களில் இருந்தும் மீட்கப்பட்டுள்ளன.

மும்பை மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், மராட்டியத்தில் ஏற்பட்ட இரு வேறு நிலச்சரிவு சம்பவங்களில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.  25 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.  அவர்களை மீட்கும் பணி தீவிரமடைந்து உள்ளது.  எனினும், இரவு வேளை என்பதனால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.

மராட்டிய மந்திரி ஏக்நாத் ஷிண்டே, பலத்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட ராய்காட் மாவட்டத்தின் திலாயே கிராமத்திற்கு நள்ளிரவில் நேரில் சென்றுள்ளார்.  அவருடன் அதிகாரிகள் மற்றும் பாதுகாவலர்களும் சென்றிருந்தனர்.

அதன்பின்பு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், உயிரிழந்தவர்களின் 33 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.  52 பேரை இன்னும் காணவில்லை.  மீட்பு பணிகள் காலையில் நடைபெறும்.  மொத்தம் 32 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன என கூறியுள்ளார்.

இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.  காயமடைந்தவர்களுக்கு நிர்வாகத்தினர் சிகிச்சை வழங்குவார்கள்.  பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெறும் என மந்திரி அறிவித்து உள்ளார்.


Next Story