நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு தலைவர் பதவியில் இருந்து சசிதரூரை நீக்க வேண்டும்; பா.ஜ.க. எம்.பி. வலியுறுத்தல்


நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு தலைவர் பதவியில் இருந்து சசிதரூரை நீக்க வேண்டும்; பா.ஜ.க. எம்.பி. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 July 2021 10:44 PM GMT (Updated: 28 July 2021 10:44 PM GMT)

நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு தலைவராக காங்கிரஸ் கட்சியின் சசிதரூர் உள்ளார். இதன் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆளும் பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள்.

இந்த நிலைக்குழு, குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் தரவு பாதுகாப்பு தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் விவாதிக்க இருந்தது. செல்போன் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக விசாரிப்பதற்காக மின்னணு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கும் நிலைக்குழு சார்பில் சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் கூட்ட அறைக்கு வந்த நிலைக்குழுவின் பா.ஜ.க. உறுப்பினர்கள், வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க காங்கிரஸ் அனுமதிக்காதபோது, இதுகுறித்து நிலைக்குழு கூட்டத்தில் எப்படி விவாதிக்க முடியும் என்று பா.ஜ.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் பங்கேற்பு இல்லாததால், கூட்டத்தை நடத்துவதற்கு தேவையான உறுப்பினர் ஆதரவு இல்லாமல் போனது. எனவே கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. சம்மன் அனுப்பப்பட்ட அமைச்சகங்களின் அதிகாரிகளும் ஆஜராகவில்லை.

இதற்கிடையில், நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு தலைவராக தனது அதிகாரத்தை பாரபட்சமாக பயன்படுத்தும் சசிதரூரை அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று மக்களவையில் பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே வலியுறுத்தினார். இதுதொடர்பாக ஏற்கனவே செவ்வாய்க்கிழமையன்று சபாநாயகரிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Next Story