3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..!


3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..!
x
தினத்தந்தி 29 Nov 2021 7:04 AM GMT (Updated: 29 Nov 2021 7:04 AM GMT)

3 வேளாண் சட்டங்கள் ரத்து செய்வதற்கான மசோதா மக்களவையில் நிறைவேறியது.

புதுடெல்லி, 

வேளாண் துறை தொடர்பாக 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. அந்த சட்டங்கள், இடைத்தரகர்கள் பிடியில் இருந்து விவசாயிகளை விடுவிக்கும் என்று மத்திய அரசு கூறியது. 

இதனைத்தொடர்ந்து பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாய சங்கங்கள் அந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. விவசாயிகள் டெல்லி எல்லை பகுதிகளில் முற்றுகையிட்டு கடந்த ஆண்டு நவம்பர் 26-ந் தேதி போராட்டத்தை தொடங்கினர். ஓராண்டுக்கு மேலாக அவர்கள் போராடி வருகிறார்கள்.

இதற்கிடையே, கடந்த 19-ந் தேதி டெலிவிஷனில் உரையாற்றிய பிரதமர் மோடி, வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இதற்கான மசோதா, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார். இருப்பினும், நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டத்தை தொடர விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்து விட்டது.

இந்நிலையில் இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. டிசம்பர் 23-ந் தேதி வரை இத்தொடர் நடக்க உள்ளது. மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் ஒரே நேரத்தில் நடக்கின்றன. 

கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல் செய்யப்படும் என்று மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதையொட்டி, நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தும் முடிவை விவசாயிகள் ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில் 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்கட்சிகளின் அமளிக்கு இடையே வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மசோதாவை தாக்கல் செய்தார். இதனையடுத்து 3 வேளாண் சட்டங்கள் ரத்து செய்வதற்கான மசோதா மக்களவையில் நிறைவேறியது. 

இதனிடையே மக்களவையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இந்த மசோதாவை மக்களவையில் விவாதிக்கக் கோரினார். வேளாண் சட்டங்கள் ரத்து செய்யும் மசோதா, நிறைவேற்றப்படுவதற்கு முன், எந்தவொரு விவாதத்தையும் அனுமதிக்கும் வகையில், அமைதி காக்கும்படி எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்தார். 

Next Story