பா.ஜனதா பிரித்தாளும் என்பதை 25 ஆண்டுகளுக்கு முன்பே சரத்பவார் கூறிவிட்டார்: சஞ்சய் ராவத் எம்.பி


பா.ஜனதா பிரித்தாளும் என்பதை 25 ஆண்டுகளுக்கு முன்பே சரத்பவார் கூறிவிட்டார்: சஞ்சய் ராவத் எம்.பி
x
தினத்தந்தி 11 Dec 2021 8:28 PM GMT (Updated: 11 Dec 2021 8:28 PM GMT)

பா.ஜனதா பிரித்தாளும் என்பதை 25 ஆண்டுகளுக்கு முன்பே சரத்பவார் கூறிவிட்டார் என சஞ்சய் ராவத் எம்.பி. கூறியுள்ளார்.

பிரித்தாளும் பா.ஜனதா

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் பேச்சுகள் அடங்கிய தொகுப்புகள் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. ‘நெம்கேச்சி போலனே' (சுருங்க சொல்) என பெயரிடப்பட்டுள்ள அந்த புத்தகத்தின் வெளியிட்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. புத்தகத்தை வெளியிட்டு பேசியதாவது:-

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பே பா.ஜனதா நாட்டின் ஒற்றுமையை விரும்பாது என சரத்பவார் கூறியுள்ளார். பிரித்தாளுவது தான் அவர்களின் முறை. இதை நாங்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் உணர்ந்தோம். இதேபோல அவர், பா.ஜனதாவின் கொள்கைகள் நாட்டை பின்னோக்கி கொண்டு செல்லும் பிற்போக்கு தனமானவை எனவும் கூறியுள்ளார். எனினும் இதை உணர நாங்கள் நீண்ட காலம் எடுத்து கொண்டோம்.

மோடிக்கு பரிசு

இதேபோல புத்தகத்தின் பெயரும் நன்றாக உள்ளது. இந்த புத்தகத்தை நாம் எல்லோரும் பிரதமர் மோடிக்கு பரிசு அளிக்கலாம். அவருக்கு சில விஷயங்கள் தெரிய வேண்டியது உள்ளது. நாடாளுமன்றத்தின் சென்ட்ரல் ஹாலில் அனைத்து கட்சியினர் மற்றும் மூத்த பத்திரிகையாளர்கள், தலைவர்கள் இடையேயான கூட்டம் நடக்கும் என்பது நமக்கு தெரியும். அப்போது பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்படும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கேள்வி எழுப்ப முயற்சி செய்பவர்களுக்கு கடிவாளம் போடப்படுவதை காணமுடிகிறது. கேள்வி எழுப்பும் உரிமை மறுக்கப்படுவது பெரும்பான்மைவாதத்திற்கு வழிவகுக்கும். இதை சில ஆண்டுகளுக்கு முன்பே சரத்பவார் கூறிவிட்டார். நாம் அதை தற்போது பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story