உத்தரபிரதேசத்தில் 6 மாதங்களுக்கு போராட்டம் நடத்த தடை...?


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 20 Dec 2021 3:54 AM GMT (Updated: 20 Dec 2021 3:54 AM GMT)

உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆறு மாதங்களுக்கு போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

லக்னோ, 

அத்தியாவசிய பணிகள் பராமரிப்பு சட்டத்தை (எஸ்மா) உத்தரப்பிரதேச அரசு கடந்த ஆண்டு மே மாதம் அமல்படுத்தியது. பின்னர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவடைந்த இச்சட்டத்தை மேலும் 6 மாதத்துக்கு நீட்டித்தது. இதனைத்தொடர்ந்து கொரோனா பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு மேலும் 6 மாதத்துக்கு நீட்டித்து அறிவிப்பாணை வெளியிட்டது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அடுத்த ஆறு மாதங்களுக்கு எந்தவிதமான போராட்டங்களையும் நடத்தக்கூடாது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை அம்மாநில கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர தேவேஷ் குமார் சதுர்வேதி நேற்று தெரிவித்தார். மேலும் தடையை மீறி போராட்டம் நடத்தினால் எஸ்மா சட்டம் பாயும் என்றும் அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

எஸ்மா சட்டத்தின்படி மாநில அரசின் அனைத்து ஊழியர்கள், மாநகராட்சி முதல் உள்ளாட்சி வரையுள்ள பணியாளர்கள், மாநில அரசு நிர்வாகத்தின் கீழ் வரும் அனைத்துப் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது. இதனை மீறுபவா்களுக்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்க முடியும். இச்சட்டத்தின் விதிகளை மீறும் எவரையும் காவல் துறையினா் கைது செய்ய அதிகாரம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story