விவசாயிகள் எனக்காகவா உயிரிழந்தார்கள் என மோடி கேட்டார் - கவர்னர் சத்ய பால் மாலிக்


விவசாயிகள் எனக்காகவா உயிரிழந்தார்கள் என மோடி கேட்டார் -  கவர்னர் சத்ய பால் மாலிக்
x
தினத்தந்தி 3 Jan 2022 9:11 AM GMT (Updated: 3 Jan 2022 1:10 PM GMT)

விவசாயிகள் எனக்காகவா உயிர் நீத்தார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டதாக மேலாகலாய கவர்னர் சத்யபால் மாலிக் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

புதுடெல்லி

பிரதமர் நரேந்திர மோடியை தான் சந்தித்துப் பேசியபோது, அவரிடம் வேளாண் மசோதாக்கள் குறித்தும் விவசாயிகள் குறித்தும் பேசினேன். அப்போது பிரதமர், "விவசாயிகள் எனக்காகவா உயிரை விட்டார்கள்" என்று கோபமாக கேட்டதாக மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் கூறியுள்ளார்.

அரியானாவில் உள்ள தத்ரியில் நடந்த விழாவில் கலந்து கொண்டு மேகாலயா கவர்னர்  சத்யபால் மாலிக் பேசினார். அவரது பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்யபால் மாலிக் கூறுகையில், நான் சமீபத்தில் பிரதமரை சந்தித்தேன். அவரிடம் வேளாண் சட்ட பிரச்சினை குறித்து விவாதிக்கத் தொடங்கினேன். ஆனால் நான் பேச ஆரம்பித்த 5வது நிமிடத்திலேயே அது வாக்குவாதமாக மாறி விட்டது. மிகவும் இறுக்கமாக பேசினார் பிரதமர்.

நமது சொந்த விவசாயிகள் 500 பேர் இந்தப் போராட்டத்தால் உயிரிழந்து விட்டதாக நான் கூறியபோது அவர் உடனே என்னைப் பார்த்து, எனக்காகவா செத்தார்கள் என்று கோபமாக கேட்டார். அதற்கு நானும் உடனே, ஆமா நீங்கதான் இந்த நாட்டின்பிரதமர். அப்படியானால் அவர்கள் உங்களுக்காக்கத்தான் இறந்தனர் என்று பதிலளித்தேன். நான் அவருடன் சண்டை போட்டேன். அவர் என்னிடம், அமித் ஷாவைச் சந்தித்துப் பேசுமாறு கேட்டுக் கொண்டார். நானும் அதைச் செய்தேன்.

ஒரு நாய் செத்தால் கூட பிரதமர் இரங்கல் தெரிவித்து கடிதம் அனுப்புகிறார். இப்படிச் சொல்வதற்காக எனது பதவியைப் பறித்தாலும் கூட நான் கவலைப்பட மாட்டேன் .

சத்யபால் மாலிக் மேலும் பேசுகையில், விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும். இதில் மத்திய அரசு நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக்க வேண்டும். போராட்டம் முடிந்து விட்டதாக அரசு நினைக்கிறது. அப்படி இல்லை. இது தற்காலிகமாகவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏதாவது அநீதி நடந்தால் நிச்சயம் போராட்டத்தை மீண்டும் விவசாயிகள் கையில் எடுப்பார்கள் என கூறினார்.

சத்யபால் மாலிக் தொடர்ந்து மத்திய அரசையும், பா.ஜ.க. தலைமையையும் விமர்சித்துப் பேசி வருவது நினைவிருக்கலாம். மேகலாயாவுக்கு முன்பு இவர் ஜம்மு காஷ்மீர், கோவா மாநிலங்களின் கவர்னராக இருந்துள்ளார்.

Next Story