உ.பி.யில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியை விசாரணையின் போது மீண்டும் பலாத்காரம் செய்த போலீஸ்!


உ.பி.யில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியை விசாரணையின் போது மீண்டும் பலாத்காரம் செய்த போலீஸ்!
x
தினத்தந்தி 4 May 2022 2:35 PM GMT (Updated: 4 May 2022 2:35 PM GMT)

தன்னை 4 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரளிக்க வந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த போலீஸ் அதிகாரி.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் லலித்பூரில் 13 வயது சிறுமியை, இரக்கமற்ற ஆசாமிகள் நான்கு பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.  இதைத் தொடர்ந்து, சிறுமி புகார் அளிக்க காவல் நிலையத்துக்குச் சென்றுள்ளார். 

அங்கு நடந்ததோ அதிலும் கேவவலமான செயல், வேலியே பயிரை மேய்ந்த கதையாகிவிட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமியை காவல் நிலைய பொறுப்பு அதிகாரியும் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சிறுமி நான்கு பேரால்  ஏப்ரல் 22 அன்று போபாலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, நான்கு நாட்கள் அவளை பாலியல் பலாத்காரம் செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவளை மீண்டும் அவளது கிராமத்திற்கு அழைத்து வந்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றனர். 

அதன்பின்னர் அந்த அதிகாரி சிறுமியை அவரது அத்தையிடம் ஒப்படைத்தார். அவளுடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்ய, மறுநாள் சிறுமி காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டாள். அங்கு அந்த அதிகாரி, சிறுமியை அவரது அத்தை முன்னிலையில் காவல் நிலையத்தில் உள்ள அறைக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். எப்ஐஆரில் சிறுமியின் அத்தையும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி, ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி திலக்தாரி சரோஜ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்ட போலீஸார் அனைவரும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த கோர சம்பவம் குறித்து, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி, ‘குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் நிலைய பொறுப்பு‌ அதிகாரி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநில ஏடிஜி பிரசாந்த் குமார் கூறுகையில், ''டிஐஜி ஜோகேந்திர குமாருக்கு விசாரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜான்சி சரக டிஐஜி ஜோகேந்திர குமார், இந்த சம்பவத்தை விசாரித்து 24 மணி நேரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். வழக்கு முடியும் வரை லலித்பூரில் தங்கும்படி அவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்'' என்று கூறினார்.

மாநில அரசை காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கடுமையாக சாடியுள்ளார்.  "உண்மையான சட்டம் ஒழுங்கு சீர்திருத்தங்கள் புல்டோசர்களின் சத்தத்தில் நசுக்கப்படுகின் என்பதை கற்பழிப்பு சம்பவம் காட்டுகிறது. காவல் நிலையங்கள் பெண்களுக்குப் பாதுகாப்பாக இல்லை என்றால், அவர்கள் எங்கு சென்று புகார்களைப் பெறுவார்கள்?" என்று பதிவிட்டுள்ளார்.

Next Story