3 நாட்களில் 3 காவலாளிகள் படுகொலை; சைக்கோ கொலையாளியை தேடி வரும் போலீஸ்


3 நாட்களில் 3 காவலாளிகள் படுகொலை; சைக்கோ கொலையாளியை தேடி வரும் போலீஸ்
x

மத்திய பிரதேசத்தில் கடந்த 3 நாட்களில் 3 காவலாளிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சைக்கோ கொலையாளியை நெருங்கி விட்டோம் என போலீசார் கூறியுள்ளனர்.



சாகர்,



மத்திய பிரதேசத்தில் சாகர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து அடுத்தடுத்து அதிர்ச்சியான சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த 2 மாதங்களில் 4 காவலாளிகள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் 3 பேர் கடந்த 72 மணிநேரத்தில் கொடூர முறையில் கொல்லப்பட்டு உள்ளனர். வீட்டுக்கு வெளியே இரவில் உறங்குபவர்களை கொலையாளி முதன்மை இலக்காக கொண்டு செயல்படுவது தெரிய வந்துள்ளது.

இந்த 3 பேரில், முதல் காவலாளி தொழிற்சாலை ஒன்றிற்கு வெளியே படுத்து தூங்கி கொண்டு இருந்துள்ளார். அவரை சுத்தியல் ஒன்றால் கொலையாளி கடுமையாக தாக்கி படுகொலை செய்து விட்டு தப்பியுள்ளார். 2-வது காவலாளி அதே மாவட்டத்தின் கலை மற்றும் வர்த்தக கல்லூரியில் வேலை செய்து வந்துள்ளார்.

அவர், பெரிய கற்களால் தாக்கி கொல்லப்பட்டு உள்ளார். 3-வது சம்பவம் நேற்றிரவு ரத்தோனா மாவட்டத்தில் நடந்து உள்ளது. இதில், மண்வெட்டி ஒன்றை பயன்படுத்தி மற்றொரு காவலாளி கொல்லப்பட்டு உள்ளார்.

இதுபற்றி சாகர் மாவட்டத்தின் உதவி போலீஸ் சூப்பிரெண்டு விக்ரம் சிங் குஷ்வாஹா கூறும்போது, ஒவ்வொரு படுகொலையிலும் வெவ்வேறு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. சந்தேகத்திற்குரிய கொலையாளியை தேடும் பணி நடந்து வருகிறது.

போலீசாருக்கு சில முக்கிய உளவு தகவல்கள் கிடைத்து உள்ளன. சந்தேக நபர்களில் ஒருவர் மோதிநகர் பகுதியில் சுற்றி திரிவது தெரிய வந்துள்ளது. அந்த பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். 3 காவலாளிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சைக்கோ கொலையாளியை நெருங்கி விட்டோம் என கூறியுள்ளார்.


Next Story