மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் 3 பேர் கைது


மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் 3 பேர் கைது
x

கோலாரில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் 3 பேரை கைது செய்த போலீசார் ரூ.33 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நாராயணா கூறியுள்ளார்.

கோலார்:-

மோட்டார் சைக்கிள் திருட்டு

கோலார் மாவட்டத்தில் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் திருடி வருகின்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்து வந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் திருடர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் கல்பேட்டை போலீசார் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் 3 பேரை கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் திருட்டு செல்போன்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நாராயணா நேற்று பார்வையிட்டு உரிமையாளர்களிடம் பொருட்களை ஒப்படைத்தார்.

3 பேர் கைது

அப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:-

கோலார் மட்டுமின்றி பெங்களூரு உள்பட பல இடங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டுகள் நடைபெறுகிறது. குறிப்பாக கண்காணிப்பு கேமரா இல்லாத இடங்களில் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள்தான் அதிகளவு திருடுபோகிறது. மேலும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிகளை குறி ைவத்து மர்ம நபர்கள் திருடுகின்றனர். இந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை திருடும், மர்ம நபர்கள் அதன் உதிரி பாகங்களை எடுத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து சொகுசு வாழ்க்கை வாழ்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இது தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில் கோலார் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக கல்பேட்டை போலீசார் 3 பேரை கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் கோலார் மாவட்டம் காரஞ்சிகட்டே படாவனேவை சேர்ந்த சஞ்சய், சையது இம்ரான், கும்பார்பேட்டையை சேர்ந்த நந்தி என்பது தெரியவந்தது. இவர்கள் மீது கோலார், பெங்களூரு ஆகிய நகரங்களில் மோட்டார் சைக்கிள் திருடியதாக 10 வழக்குகள் பதிவாகியுள்ளது. இது தவிர செல்போன் திருட்டு வழக்கும் இவர்கள் மீது பதிவாகியிருக்கிறது. இந்த வழக்குகள் தொடர்பாக 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ரூ.30 லட்சம் மதிப்பிலான 30 மோட்டார் சைக்கிள்கள், ரூ.3 லட்சம் மதிப்பிலான 50 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

ரூ33. லட்சம் மதிப்பு...

மொத்தம் ரூ.33 லட்சம் மதிப்பிலான மோட்டார் சைக்கிள்கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த பொருட்கள் அனைத்தும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் பொதுமக்களும் உஷாராக இருக்கவேண்டும். கண்காணிப்பு கேமரா இல்லாத இடங்களில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்துவதை தவிா்க்கவேண்டும்.

செல்போன் பேசியபடி சாலையில் செல்வதை குறைக்கவேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே திருட்டு சம்பவங்களை குறைக்க முடியும். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story