பெங்களூரு உணவகத்தில் வெடித்தது வெடிகுண்டு: கர்நாடக முதல் மந்திரி அதிர்ச்சி தகவல்


பெங்களூரு உணவகத்தில் வெடித்தது வெடிகுண்டு: கர்நாடக முதல் மந்திரி அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 1 March 2024 9:45 AM GMT (Updated: 1 March 2024 2:57 PM GMT)

வெடிகுண்டு வெடித்ததில், உணவகத்தின் முன் பக்கம் சேதமடைந்ததோடு உள்ளே தீ பற்றி எரிந்து கொண்டிருந்ததது. உணவகத்தில் இருந்தவர்கள் சிலர் காயமடைந்திருந்தனர்

பெங்களூரு,

பெங்களூரு குண்டனஹல்லி இருக்கிறது பிரபல உணவகமான ராமேஸ்வர கஃபே. இந்தப் பெயரில் நகரெங்கும் பல கிளைகள் இயங்குகின்றன. மக்கள் கூட்டம் எப்போது அலைமோதும் இந்த உணவகத்தின் ராஜாஜி நகர் கிளையில் இன்று மதியம் 1 மணி அளவில் பயங்கர வெடிப்புச் சத்தம் கேட்டது.சுற்றியிருந்தவர்கள் சென்று வெடிகுண்டு வெடித்ததில், உணவகத்தின் முன் பக்கம் சேதமடைந்ததோடு உள்ளே தீ பற்றி எரிந்து கொண்டிருந்ததது. உணவகத்தில் இருந்தவர்கள் சிலர் காயமடைந்திருந்தனர்

இந்தச் சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும் பெங்களூரு ஒயிட்ஃபீல்டு காவல் துறையினர் அங்கு விரைந்து சென்றனர். உணவகத்தில் இருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என சிலர் காயமடைந்துள்ளனர். 9 பேர் வரை காயமடைந்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது. முதலில் சிலிண்டர் விபத்து என சொல்லப்பட்ட நிலையில், வெடிகுண்டு வெடித்து இருப்பதாக கர்நாடக முதல் மந்திரி கூறியுள்ளார். வாடிக்கையாளர் ஒருவர் பையை விட்டு சென்றதாகவும் அவர் வைத்த பையில் உள்ள பொருள் தான் வெடித்து இருப்பதாகவும் சித்தரமையா கூறினார்.

சம்பவம் நடந்த இடத்தை துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், போலீஸ் மந்திரி பரமேஸ்வர் ஆகியோர் இரவு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன் பிறகு டி.கே.சிவக்குமாா் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

குண்டு வெடிப்பு நிழ்ந்த இடத்தை நேரில் பார்வையிட்டோம். போலீசார் இங்கு வந்து விசாரணையை தொடங்கியுள்ளனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார், வெடிகுண்டு தடுப்பு போலீசார், தடய அறிவியல் சோதனை நிபுணர்கள் வந்து ஆய்வு செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர். குறைந்த திறன் கொண்ட குண்டு வெடித்துள்ளது.

மதியம் 12 மணிக்கு சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் ஓட்டலில் உணவு சாப்பிட்டுவிட்டு பையை அங்கு வைத்துவிட்டு சென்றுள்ளார். ஒரு மணி நேரத்திற்கு பிறகு அதில் இருந்து குண்டு வெடித்துள்ளது. அந்த நபரை போலீசார் சில மணி நேரத்தில் கைது செய்வார்கள். இதற்காக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. எந்த வகையான விசாரணைக்கும் தயாராக உள்ளோம். பெங்களூரு மக்கள் பயப்பட தேவை இல்லை. காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறவர்களையும் நாங்கள் நேரில் பார்த்து பேச உள்ளோம்.இதில் யாரும் அரசியல் செய்யக்கூடாது. பா.ஜனதாவினர் விமர்சிக்கிறார்கள். அவர்களின் ஆட்சி காலத்திலும் இத்தகைய சம்பவங்கள் நடந்தது. அதுபற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story