ஜார்கண்டில் ரெயில்வே சுரங்கப்பாதை இடிந்து 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு


ஜார்கண்டில் ரெயில்வே சுரங்கப்பாதை இடிந்து 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு
x

ஜார்கண்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரெயில்வே சுரங்கப்பாதை இடிந்து 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தின் சட்டாகுலி கிராமத்துக்கு அருகே ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இங்கு நேற்று முன்தினம் இரவில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென அந்த சுரங்கப்பாதையில் மண் இடிந்து விழுந்தது. இதில் 4 தொழிலாளர்கள் உயிரோடு மண்ணில் புதைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த கிராம மக்கள் 4 பேரையும் மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. உடனே ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கும், போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். ஆனால் மண் சரிவுக்குள் சிக்கிய தொழிலாளர்கள் 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்குப்பின் நேற்று காலையில் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. ரெயில்வே சுரங்கப்பாதை இடிந்து விழுந்து 4 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story