தாவணகெரேயில் லோக் அதாலத் மூலம் 4,224 வழக்குகளுக்கு தீர்வு


தாவணகெரேயில் லோக் அதாலத் மூலம் 4,224 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 10 Sep 2023 6:45 PM GMT (Updated: 10 Sep 2023 6:46 PM GMT)

தாவணகெரேயில் லோக் அதாலத் மூலம் 4,224 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அத்துடன் விவகாரத்து கோரிய 13 தம்பதிகளும் ஒன்று சேர்ந்தனர்.

சிக்கமகளூரு-

தாவணகெரேயில் லோக் அதாலத் மூலம் 4,224 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அத்துடன் விவகாரத்து கோரிய 13 தம்பதிகளும் ஒன்று சேர்ந்தனர்.

லோக் அதாலத்

நாடு முழுவதும் இந்தியாவின் அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மாவட்ட கோர்ட்டுகளில் நேற்று முன்தினம் லோக் அதாலத் என்னும் மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதேபோல் கர்நாடகத்திலும் அனைத்து மாவட்ட கோர்ட்டுகளிலும் நேற்று முன்தினம் லோக் அதாலத் நிகழ்ச்சி நடந்தது. இதில், குடும்ப பிரச்சினை, திருட்டு, விவாகரத்து, நிலப்பிரச்சினை, காசோலை மோசடி, போக்குவரத்து விதிமீறல் தொடர்பான வழக்குகள் மற்றும் நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் வழக்குகளை விசாரித்து தீர்வு காணப்பட்டது.

தாவணகெரே மாவட்ட கோர்ட்டிலும் நேற்று முன்தினம் லோக் அதாலத் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தலைமை நீதிபதி ராஜேஸ்வரி முன்னிலையில் நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை லோக் அதாலத் நடந்தது.

4,224 வழக்குகளில் தீர்வு

தாவணகெரேயில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 4,224 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது. குறிப்பாக விவாகரத்து கோரிய 13 தம்பதிகளிடம் நீதிபதி ராஜேஸ்வரி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர்கள் சமாதானம் அடைந்து விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்று, ஒன்றாக சேர முடிவு செய்தனர். இதையடுத்து விவாகரத்து கோரிய 13 வழக்குகளில் தீர்வு காணப்பட்டது. 13 தம்பதிகளுக்கும் நீதிபதி ராஜேஸ்வரி அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். அவர்கள் அங்கிருந்து சந்தோசமாக சென்றனர்.

இதுதவிர 103 குற்ற வழக்குகளும், 105 காசோலை மோசடி வழக்குகளும், 41 நிலப்பிரச்சினை வழக்குகளும், 22 போக்குவரத்து விதிகளை மீறிய வழக்குகளிலும் தீர்வு காணப்பட்டது.

மேலும் பல்வேறு வழக்குகளில் நிவாரணம் கேட்டு வழக்கு தொடர்ந்தவர்களுக்கு ரூ.47 கோடி வரை பணம் பெற்று கொடுக்கப்பட்டது.


Next Story