மூளைச்சாவு அடைந்த 60 வயது பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்


மூளைச்சாவு அடைந்த 60 வயது பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்
x

மூளைச்சாவு அடைந்த 60 வயது பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

பெங்களூரு:

மூளைச்சாவு அடைந்த 60 வயது பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

புனித் ரசிகை

பெங்களூருவை சேர்ந்தவர் நாகராஜா. இவர் விவேகானந்தா கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஆவார். இவரது மனைவி சசிகலா(வயது 60). இந்த தம்பதிக்கு புனித் ராஜ் மற்றும் தர்ஷன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சசிகலா, மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ் குமாரின் தீவிர ரசிகை என கூறப்படுகிறது. இதனால் அவர் தனது இறப்பிற்கு பிறகு, உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு பதிவு செய்து இருந்தார். இந்த நிலையில் அவருக்கு கடந்த 10 ஆண்டுகளாக அடிக்கடி தலைவலி ஏற்பட்டு வந்துள்ளது.

இதற்காக அவர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 11-ந் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவர் கெங்கேரியில் உள்ள பி.ஜி.எஸ். குளோபல் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் கடந்த 14-ந் தேதி மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

பீகாரை சேர்ந்தவருக்கு...

அவரது கல்லீரல் மற்றும் கண்கள் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு எடுக்கப்பட்டது. பின்னர் அவரது கல்லீரல் பீகாரை சேர்ந்த தொழில் அதிபருக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. மேலும் அவரது கண்கள், பெங்களூருவில் உள்ள கண் தான மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. உயிர் இழந்த பிறகும், 2 பேருக்கு மறுவாழ்வு அளித்த சசிகலாவின் குடும்பத்திற்கு பாராட்டுகள் குவிகிறது.


Next Story