திகார் ஜெயிலில் ரவுடி கொலை: 99 சிறை அலுவலர்கள் இடமாற்றம்


திகார் ஜெயிலில் ரவுடி கொலை: 99 சிறை அலுவலர்கள் இடமாற்றம்
x

திகார் ஜெயிலில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 99 சிறை அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

புதுடெல்லி,

டெல்லி திகார் ஜெயிலில் கடந்த 2-ந் தேதி பிரபல ரவுடி தாஜ்பூரியா, சிறைக்குள்ளேயே எதிர்தரப்பு ரவுடி கும்பலால் கொடூரமாக தாக்கி கொல்லப்பட்டார். அங்கு பதிவான வீடியோ காட்சியில், சிறை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், கொலையை தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து அந்த இடத்தில் பணியில் இருந்த தமிழக சிறப்பு காவல் படைப் பிரிவை சேர்ந்த 7 போலீசார், அங்கிருந்து திரும்ப அழைக்கப்பட்டனர். இந்திய திபெத்திய காவல்படையை சேர்ந்த சிலர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த நிலையில், இந்த சம்பவத்தையடுத்து 99 சிறை அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறைத்துறை டி.ஜி.பி. சஞ்சய் பெனிவால் உத்தரவின்பேரில் பல உதவி சூப்பிரண்டுகள், துணை சூப்பிரண்டுகள், தலைமை வார்டன்கள் மற்றும் வார்டன்கள் உள்பட 99 சிறை அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் சிலரும் அடுத்த சில நாட்களில் இடமாற்றம் செய்யப்படலாம் என்றும் அவர் கூறினார்.


Next Story