'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பாக டெல்லியில் உயர்மட்டக் குழுவினர் ஆலோசனை


ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக டெல்லியில் உயர்மட்டக் குழுவினர் ஆலோசனை
x

Image Courtesy : ANI

முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

புதுடெல்லி,

இந்தியாவில் தற்போது நாடாளுமன்ற மக்களவைக்கும், மாநில சட்டசபைகளுக்கும் 5 ஆண்டு பதவிக்காலம் நிறைவடைந்த பின்னர் தனித்தனியாக தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. அவ்வாறு தனித்தனியாக நடத்தாமல் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதே 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பதாகும்.

கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சிப்பொறுப்பேற்றதில் இருந்தே 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறையை பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். ஆனால் இது சாத்தியம் அல்ல என்று எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர். எனினும் இந்த விஷயத்தில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

'ஒரே நாடு ஒரே தேர்தல்' குறித்து ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறையை அமல்படுத்துவது குறித்து ஆலோசனைகளை வழங்கும்படி தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் மற்றும் பொதுமக்களிடம் உயர்மட்டக் குழு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த நிலையில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பாக டெல்லியில் உயர்மட்ட குழுவினர் நேற்று ஆலோசனை நடத்தினர். ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், இதுவரை அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் இது தொடர்பான விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story