சிவமொக்காவில் திருமணம் செய்து கொள்ளும்படி கூறி இளம்பெண்ணிற்கு கொலை மிரட்டல்


சிவமொக்காவில்  திருமணம் செய்து கொள்ளும்படி கூறி இளம்பெண்ணிற்கு கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 28 Aug 2023 6:45 PM GMT (Updated: 28 Aug 2023 6:45 PM GMT)

சிவமொக்காவில் திருமணம் செய்து கொள்ளும்படி கூறி இளம்பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

சிவமொக்கா-

சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகாவில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணின் தந்தை இறந்துவிட்டார். இந்தநிலையில் அதே பகுதியில் வசித்து வந்த வாலிபர் ஒருவர், அந்த பெண்ணிற்கு காதல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்ற வாலிபர், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறி கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனை பார்த்த அந்த பெண்ணின் தாய் உடனே இதுகுறித்து சாகர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வாலிபரை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் வரதஹள்ளி பகுதியில் வைத்து வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அந்த வாலிபர் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. அந்த பெண் இந்து சமுதாயத்தை சேர்ந்தவர் ஆவார். வாலிபர் அந்த பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்தார்.

இந்தநிலையில் பெண்ணை, வாலிபர் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். இதனால் அடிக்கடி பெண்ணின் வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மிரட்டி வந்தது தெரியவந்தது. தற்போது இந்த விவகாரம் இந்து அமைப்பினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் சாகரில் பதற்றம் நீடித்து வருவதால் போலீசார் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


Next Story